கொரோனா அச்சம்... ஃபோர்டு, டெஸ்லா, ஜிஎம் நிறுவனங்கள்மீது ட்ரம்ப் புகார்...
கொரோனா அச்சம் தீவிரமடைந்து வருகின்ற நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான ஜிஎம், டெஸ்லா, ஃபோர்டு ஆகியவை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

கொரோனா பீதியால் உலக நாடுகள் அனைத்தும் உரைந்து கிடப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த பீதி நியாயமானதுதான். ஏனென்றால், உயிர் கொல்லி வைரஸான இந்த கொரோனா ஒருவரிடத்தில் மற்றொருவருக்கு மிக எளிதில் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, நோய் தொற்று உடையவரிடம் நெருங்கி பழகுவது மற்றும் அவர் இரும்பும்போது அல்லது தும்பும்போது அருகில் இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகின்றது.

கொரோனா தொற்றுடைய நபர்களை பல்வேறு பாதுகாப்பு கவசங்களுடன் கையாண்ட மருத்துவர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே, கொரோனாவின் அதி தீவிரத்திற்கு சான்றாக இருக்கின்றது. ஆனால், இந்திய மக்கள் பலர் இந்த வைரஸின் அபாயத்தைப் பற்றி அறியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அவர்கள் கோடை விடுமுறையைக் கழிப்பதைப் போன்று ஜாலியாக சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த வைரஸ் தொற்று ஏற்படுமேயானால் மிக முக்கியமாக மனிதனுடைய சுவாச மண்டலத்தையே முதன்மை இலக்காக வைத்து தாக்கும். ஆகையால், அவர்கள் சுவாசிப்பதற்கு கடும் அவதிக்குள்ளாவார்கள். இதற்கு செயற்கை சுவாச கருவிகளான வென்டிலேட்டர்கள் மட்டுமே தீர்வாக உள்ளது. ஆனால், இந்த வென்டிலேட்டர் அம்சம் பல மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலேயே மிகக் குறைவாகதான் இருக்கின்றன.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதே நிலைதான் தற்போது காணப்படுகின்றது. ஆகையால், அந்தந்த நாடுகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் வென்டிலேட்டர்களைத் தயாரிக்குமாறு அந்நாட்டு அரசுகள் உதவி கரம் நீட்டியிருக்கின்றன.

இதே நடவடிக்கையில்தான் அமெரிக்க அரசும் அண்மையில் களமிறங்கியது. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் உதவியை நாடினார்.
ஆனால், உத்தரவு வழங்கி சில காலங்களாகியும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் இன்னும் வென்டிலேட்டர்கள் தயாரிப்பதில் தாமதம் செய்து வருவதாக சமீபத்திய டுவிட்டர் பதிவின்மூலம் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக கைவிடப்பட்ட ஆலைகளை திறந்து பணியாற்றவும் அதில் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, "ஜெனரல் மோட்டார்ஸ் உடனடியாக ஓஹியோவில் கைவிடப்பட்ட லார்ட்ஸ்டவுன் ஆலையை திறந்து வென்டிலேட்டர்களை தயாரியுங்கள். ஃபோர்டு, வென்டிலேட்டர்களை வேகமாக தயாரியுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில் விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து உங்களில் யார் நல்லவர் என்பதை நிரூபியுங்கள் என ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு அவர் கூறியிருக்கின்றார்.

கொரோனா வைரஸ் அதிக நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்தபோது வென்டிலேட்டர்களைத் தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த 22ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான அனைத்து உலோகப் பொருட்களையும் வழங்க மற்ற நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தற்போது வரை கால தாமதம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடகவே அவர் டுவிட்டரில் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். அதேசமயம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள நியூயார்க் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

முன்னதாக, அதன் பணியாளர்களுக்கு கொரோனா ஆய்வு செய்து, இதன் பின்னரே பணியைத் தொடங்க இருப்பதாக அது தெரிவித்தது.
தொடர்ந்து, பணியின்போது ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.

இதேமாதிரியான இக்கட்டான சூழ்நிலை இந்தியாவிலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இம்மாதிரியான நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் வெறும் 48 மணி நேரத்தில் மிகவும் மலிவு விலைக் கொண்ட புரோட்டோ டைப்பிலான வென்டிலேட்டர்களைத் தயார்செய்து அசத்தினர். இது விரைவில் தயாரிப்பிற்கு செல்லப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








