பிரதமர் மோடிக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசம்! ஆரம்பிக்கும் முன்னரே முடிகிறதா எலக்ட்ரிக் கார் சாம்ராஜ்ஜியம்?
எதிர்காலத்தில் நடக்கவுள்ளவற்றை யாராலும், எந்த அறிவியலாலும் கணிக்க முடியாது. எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் உலக மக்கள் இருப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவரும் சூழலில், எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன் என இன்றைய கால உலகின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப். எதற்காக இவர் இப்படி பேசியுள்ளார்? எலக்ட்ரிக் கார்களின் விற்பனையை நிறுத்த முடியுமா? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் முன்னணி வல்லரசு நாடான அமெரிக்காவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. உலகின் இரு பெரும் ஆதிக்க நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய தேர்தல்கள் இந்த 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தோம். அதன்படி, தேர்தல் நடத்தப்பட்டு இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவின் 45வது அதிபராக 2017ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரையில் டோனால்ட் டிரம்ப் பொறுப்பு வகித்தார். அதன்பின் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடனின் பதவி காலம் முடிவடைந்து மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டோனால்ட் டிரம்ப் பழமைவாதி என்பது அவரது பல்வேறு பேச்சுகள் மூலம் நமக்கு தெரியும். எலக்ட்ரிக் வாகனங்களை அரசாங்கம் ஊக்குவதில் டோனால்ட் டிரம்ப்பிற்கு பெரியதாக உடன்பாடு கிடையாது. இந்த நிலைப்பாடு டிரம்ப்பின் சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போதும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

மகா (MAGA - Make America Great Again) என்கிற பெயரில் பிரச்சாரத்தை நடத்திவரும் டோனால்ட் டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பேசியுள்ளார். மேலும், ஜோ பைடன் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட வேறு சில காலநிலை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்களையும் நிறுத்தவுள்ளதாக டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபரான பின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி சலுகைகளை குறைக்கவுள்ளதாக கூறியுள்ள டோனால்ட் டிரம்ப், எரிபொருள் என்ஜின் வாகனங்களுக்கான மாசு உமிழ்வு இலக்குகளை மீண்டும் கொண்டுவர உள்ளதாகவும் பிரச்சாரம் செய்துள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், டோனால்ட் டிரம்ப் மிகவும் பழமைவாதி. எந்த அளவிற்கு என்றால், மொத்த உலக நாடுகளும் அஞ்சும் உலக வெப்பமயமாதல் விஷயத்தை கூட பொய் என நம்புகிறார்.

அறிவியலாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்தாலும், உலக வெப்பமயமாதல் குறித்த பேச்சுகள் வெறும் ஏமாற்று செயல் என நினைத்துக் கொண்டிருக்கும் டோனால்ட் டிரம்ப்பின் மனநிலையில் தான் கிட்டத்தட்ட பெரும்பான்மையான அமெரிக்க குடியரசு கட்சி உள்ளது. அதாவது, இந்த கட்சியில் உள்ள பெரும்பாலான தலைவர்களின் எண்ணோட்டம் இதுவாகவே இருக்கிறது. உலக வெப்பமயமாதலையே புறக்கணிப்பவருக்கு எலக்ட்ரிக் கார்களின் முக்கியத்துவம் தெரியவா போகிறது.
எலக்ட்ரிக் கார்கள் நமது எதிர்காலம் கிடையாது என அடித்துக் கூறும் டோனால்ட் டிரம்ப், இது எல்லாம் பைடன் அரசாங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சூழ்ச்சி என கூறுகிறார். டோனால்ட் டிரம்ப்பின் இந்த பேச்சால், அமெரிக்காவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குழப்பத்தில் உள்ளன. ஒருவேளை டிரம்ப் அதிபராகினால் எலக்ட்ரிக் வாகன வணிகம் பாதிக்கப்படுமோ என புதிய முதலீடுகளில் எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தலைவர் எவ்வழியோ அவ்வழியே நாடும் செல்லும். டோனால்ட் டிரம்ப் அதிபராகினால், அவர் எடுக்கப்போகும் முடிவு அமெரிக்காவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறைய நாடுகள் அமெரிக்க வணிகத்தையே சார்ந்திருக்கின்றன, நமது இந்தியாவும் உள்பட. பிரதமர் மோடி எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









