வெளியானது அதிரடி உத்தரவு... இனி வண்டிகளை நிப்பாட்டி காசு வசூல் பண்ண முடியாது... போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க!
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அதிரடியான உத்தரவு ஒன்று தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காவல் துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில், ஆவண சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வசூல் வேட்டை நடத்துவதும் ஒன்றாகும். டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை சோதனை செய்வதாக கூறி வாகன ஓட்டிகளிடம் போலீசார் வசூல் வேட்டை நடத்துவதை கண் கூடாகவே காண முடிகிறது.

இது வாகன ஓட்டிகளுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாது, தேவையில்லாமல் கால விரயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களால் சரியான நேரத்தில் சென்று சேர முடிவதில்லை. இதன் காரணமாக இறுதியில் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.

இது தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது கண்ணால் காண கூடிய வகையிலான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வரையில், வாகனங்களை நிறுத்த கூடாது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால், காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம். ஆனால் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்தி, வாகன ஓட்டிகளை துன்புறுத்த கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்தது கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட் ஆவார்.

இந்த சூழலில் அதே உத்தரவை தற்போது கோவா டிஜிபி ஜஸ்பால் சிங்கும் பிறப்பித்துள்ளார். கோவா மாநிலத்தில் உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் ஆவண சோதனை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன. இதையடுத்துதான் கோவா டிஜிபி ஜஸ்பால் சிங் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், காவல் துறையினர் அவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கலாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் அவர்களை நிறுத்தி நேரத்தை வீணடிக்க கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்த உத்தரவு நன்மை அளிக்கும் என டிஜிபி ஜஸ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டிஜிபி ஜஸ்பால் சிங், ''கோவாவிற்கு சுற்றுலா வருபவர்கள் சுகமான நினைவுகளுடன் திரும்ப வேண்டும்'' என்றார். இந்த பிரச்னை கோவா மாநில சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்ட நிலையில்தான், டிஜிபி ஜஸ்பால் சிங் காவல் துறையினருக்கு தற்போது அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோவா மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் துன்புறுத்த கூடாது. இது தொடர்பான உத்தரவுகளை காவல் துறையினருக்கு பிறப்பிக்க வேண்டும் என முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்துதான் டிஜிபி ஜஸ்பால் சிங்கிடம் இருந்து தற்போது இந்த உத்தரவு வந்துள்ளது.

ஆவண சோதனை என்ற பெயரில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் காவல் துறையினரால் துன்புறுத்தப்படுவதை காவல் துறை உயர் அதிகாரிகளும் ஒப்பு கொண்டுள்ளனர். இந்த சூழலில் வெளிவந்துள்ள இந்த உத்தரவு கோவா மக்களுக்கும், கோவாவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் பிரச்னைகளை தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும். பிரச்னைகளை உருவாக்குபவர்களாக இருக்க கூடாது என காவல் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோன்ற உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் இங்குள்ள வாகன ஓட்டிகள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக காவல் துறை உயரதிகாரிகள் இதுபற்றி பரிசீலனை செய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








