தமிழகத்தில் பரவும் கிகி சேலஞ்ச்.. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுபவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
உலகம் முழுவதும் பலரின் உயிரை பறித்த ஆபத்தான 'கிகி சேலஞ்ச்', தற்போது தமிழ் நாட்டு மண்ணிலும், காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கிகி சேலஞ்ச் செய்ய வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் பலரின் உயிரை பறித்த ஆபத்தான 'கிகி சேலஞ்ச்', தற்போது தமிழ்நாட்டு மண்ணிலும், காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கிகி சேலஞ்ச் செய்ய வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

'ஐஸ் பக்கெட் சேலஞ்ச்', இந்திய பிரதமர் மோடியின் 'பிட்னஸ் சேலஞ்ச்' வரிசையில், சமீப காலமாக உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது 'கிகி சேலஞ்ச்'. கடந்த ஒரு மாத காலமாக உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வரும் 'கிகி சேலஞ்ச்', தற்போது தமிழகத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது.

கனடா நாட்டை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டிரேக் என்பவர் எழுதி வெளியிட்ட பாடலின் பெயர் 'இன் மை பீலிங்ஸ்' (In My Feelings). இந்த பாடலில் வரும் 'கி கி டூ யூ லவ் மீ' (kiki do you love me)பாடல் வரிகள் பின்னணியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப நடனம் ஆட வேண்டும்.

இதுதான் 'கிகி சேலஞ்ச்' அல்லது 'இன் மை பீலிங்ஸ் சேலஞ்ச்' என உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது. நடனம்தானே என சுலபமாக நினைத்து விட வேண்டாம். ஓடும் காரில் இருந்து இறங்கி, 'கி கி டூ யூ லவ் மீ' பாடல் வரிகளுக்கு நடனம் ஆட வேண்டும். பின்னர் மீண்டும் காரில் ஏறி கொள்ள வேண்டும்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்டு பலர், ஓடும் காரில் இருந்து இறங்கி 'கி கி டூ யூ லவ் மீ' பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர். இதனை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரெஜினா, 'கிகி சேலஞ்ச்' செய்து, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கேட்பதற்கும், பார்ப்பதற்கும், செய்வதற்கும் சுவாரசியமாக இருந்தாலும், 'கிகி சேலஞ்சில்' பேராபத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 'கிகி சேலஞ்ச்' செய்து கொண்டிருக்கும்போது, பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் காயம் அடைந்த வீடியோக்களும், வைரலாக பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சிலர் மரணமும் அடைந்துள்ளனர். எனவே 'கிகி சேலஞ்சுக்கு' ஒரு புறம், பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இத்தனை ஆபத்துக்கள் உள்ள நிலையில், ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நாய் உள்ளிட்ட விலங்குகளையும், கிகி சேலஞ்சில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

அமெரிக்க நாட்டில் ஒரு சிலர், மிகவும் பரபரப்பான சாலைகளில், திடீரென கிகி சேலஞ்சை செய்து வருகின்றனர். வாகன நெரிசல் மிகுந்த சாலைகளில், திடீரென ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடுவதால், இதர வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

அமெரிக்காவில் இவ்வாறு ஓடும் காரில் இருந்து திடீரென கீழே இறங்கி நடனமாடுகையில், ஒருவர் மீது கார் மோதிய வீடியோவும் கூட வைரலாக பரவியது. இது போன்ற காரணங்களால்தான், உலகம் முழுவதும் கிகி சேலஞ்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுவது பாதுகாப்பு இல்லாததது என்பதால், கிகி சேலஞ்ச் போன்ற முட்டாள்தனமான சவால்களை செய்ய வேண்டாம் என ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு எமீரகம் போன்ற நாடுகளின் போலீசார், பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

கிகி சேலஞ்ச் செய்த மூன்று பேரை அபுதாபி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிலும், கிகி சேலஞ்ச் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எகிப்து போலீசார் ஒரு படி மேலே போய் விட்டனர். போக்குவரத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் வகையில், கிகி சேலஞ்ச் செய்பவர்கள், ஒரு வருட சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியது வரும் என எகிப்து போலீசார் எச்சரித்துள்ளனர். அத்துடன் இந்திய மதிப்பில் ரூ.12 ஆயிரம் அபராதமும் கட்ட வேண்டும்.
இந்த சூழலில், மும்பை போலீசாரும் டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'இது உங்களுக்கு மட்டும் ஆபத்தானது அல்ல. உங்களின் நடத்தை, மற்றவர்களின் வாழ்க்கையையும் ஆபத்தில் கொண்டு சென்று விட்டு விடும். பிறருக்கு தொல்லை தருவதை நிறுத்துங்கள்' என மும்பை போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

சாலை பாதுகாப்பு தொடர்பாக, மும்பை போலீசார் தொடர்ச்சியாக டிவிட்டரில் பல்வேறு பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிகி சேலன்சிற்கு எதிராக, மும்பை போலீசார் பிரசாரம் செய்துள்ளனர்.
முன்னதாக கிகி சேலஞ்ச் செய்யும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டாம் என உத்தரபிரதேச போலீசாரும், பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 'கிகி சவால் தவிர, உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களுக்கும் துணை நில்லுங்கள்' என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். இதுதவிர சண்டிகர், பஞ்சாப் போலீசாரும் கூட, விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








