இனி இந்த கிழமைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை யூஸ் பண்ண கூடாது... தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி!
இனி வாரத்தில் ஒரு நாள் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டபோது கூட காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் காற்று மாசுபாடு பிரச்னைக்கு பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன.

இந்த சூழலில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி வாரந்தோறும் புதன் கிழமைகளில் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் புதன் கிழமைகளில் அலுவலகத்திற்கு பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களில் வரக்கூடாது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்தின் காற்று மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு ஆகியவை சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள் அனைவரும் புதன் கிழமைகளில் எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த கூடாது'' என்றார்.

இதன் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக வளாகத்திற்குள் காற்று மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 சதவீதம் வரை காற்று மாசுபாடு பிரச்னை குறையலாம் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக பேருந்து போன்ற பொது போக்குவரத்து மற்றும் சைக்கிள் போன்ற வாகனங்களை ஊழியர்கள் பயன்படுத்தலாம்.

மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இது தமிழ்நாடு அரசின் மற்ற துறைகளுக்கும் ஒரு முன்னுதாரணம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ஆனால் இந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியாவில் தற்போதே அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் உயர்ந்து கொண்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டில் சீனா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் அளவிற்கு இந்தியா இன்னும் வளர்ச்சியடையவில்லை.

எனினும் வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான முயற்சிகளை ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சலுகைகள் கிடைப்பதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதாலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால் இந்திய சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. எனினும் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








