இனி காரில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனை.. இந்தியாவின் முதல் ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகம்..
காரை விட்டு இறங்காமல், அதில் அமர்ந்தபடியே கொரோனா பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை வழங்க முடியும். இதற்கான பிரத்யேக ட்ரைவ்-த்ரூ பரிசோதனை மையம் அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது புதிய உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இது உலக நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுவதற்கு பதிலாக மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குவதில் சிக்கலும், பெரும் சவால்களும் நிலவி வருகின்றன.

குறிப்பாக, மருத்துவத்துறையில் அதீத வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடுகள்கூட இந்த வைரஸ் விவகாரத்தில் தீர்வு காண முடியாமல் திணறி வருகின்றன. எனவே, உலக நாடுகள் பல அதன் குடிமக்களை தங்களை தாங்களே சுய தனிமைப் படுத்திக் கொண்டு கொரோனாவில் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தி வருகின்றன.

இதற்காக, ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் வெளியே வர தடை என பல அதிரடி நடவடிக்கைகளை அவை எடுத்து வருகின்றன. இதேநிலைதான் தற்போது இந்தியாவிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்த வைரஸ், காட்டுத் தீயின் வேகம், முயலின் வேகம், புல்லட் ரயிலின் வேகம் என அனைத்து வேகங்களையும் மிஞ்சுகின்ற வகையில் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலும், அண்மைக் காலங்களாக இதன் தொற்று தீவிரம் மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆகையால், வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கூடுதலாக நீட்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த நமக்கு இருக்கும் ஒரே வழி ஆகும். இந்தியாவில் தற்போது வரை இந்த கொடிய உயிர் கொல்லி வைரசைக் கண்டறியச் சொற்பளவிலான மருத்துவக் கூடங்களே உள்ளன.

ஆனால், இந்தியாவோ அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. மேலும், ஜனத்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் மிக மிகக் குறைவாக உள்ளது. எனவே, அந்தந்த மாநில அரசுகள் இந்த நிலையைக் போக்கும் விதமாக புதிய மருத்துவ ஆய்வுக் கூடங்களை உருவாக்கி வருகின்றன. மேலும் சிகிச்சைக்கான கருவிகளை இறக்குமதி செய்தல் மற்றும் உருவாக்குவதிலும் அதி தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், பிரபல டாக்டர் டேங்ஸ் (Dr Dangs Lab) எனப்படும் மருத்துவ ஆய்வுக்கூடம் ஒன்று கொரோனாவிற்கான ட்ரைவ்-த்ரூ (Drive-Through) ஆய்வு கூடத்தை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்காக பிரத்யேகமாக தயாராகிய முதல் ட்ரைவ்-த்ரூ ஆய்வுக் கூடம் இதுவே ஆகும். இதுகுறித்த தகவலை ஏஎன்ஐ செய்தி தளம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நடமாடும் ஆய்வுக் கூடத்தைப் பற்றிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் காரில் வரும் நபர்கள் பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை காரில் இருந்த வழங்கிவிட்டு செல்வதை நம்மால் காண முடிகின்றது. எந்தவொரு தேவைக்காவும் காரைவிட்டு இறங்க வேண்டிய அவசியமில்லை. இதுவே, ட்ரைவ் த்ரூ ஆய்வுக் கூடம் ஆகும். உங்களில் பலருக்கு ட்ரைவ்-த்ரூ ஆய்வுக் கூடம் என்றால் என்ன..? என்ற கேள்வி எழும்பியிருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதிரியான ஆய்வுக் கூடங்கள் மேலை நாடுகளில் ஏராளமாக இருக்கின்றன. காரை விட்டு இறங்காமலே திரைப்படம் பார்ப்பது, உணவு வாங்குவது, பெட்ரோல் போடுவது இவற்றின் அடிப்படையிலேயே இந்த ட்ரைவ் த்ரூ ஆய்வுக் கூடங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இம்மாதிரியான ஆய்வு கூடத்தைதான் தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் டாக்டர் டேங்ஸ் லேப் பயன்பாட்டுக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வு கூடத்திற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் சிறிய கூடாரம் போல் உருவாக்கப்பட்டிருக்கும் தற்காலிக ஆய்வு கூடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
அங்கு ஆய்விற்காக வருபவர்களிடம் காரில் இருந்தபடியே மாதிரிகள் மிகவும் பாதுகாப்பான முறையில் வாங்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஒருவர் தேவையான மாதிரிகளைக் கொடுத்த பின்னர் அங்கு ரிசல்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. மேலும், ஆய்வுக் கூடத்திற்கு மீண்டும் வர வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால் ஆய்வின் முடிவுகள் அனைத்தும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக டாக்டர் டேங்ஸ் லேப் அனுப்பி வைத்து வருகின்றது.

இந்த சிறப்பு ஆய்வுக் கூடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது, அவர்களுக்கு வைரசால் எந்தவித ஆபத்தும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்கும். குறிப்பாக, வைரஸ் மற்றும் மாதிரிகளை கையாளும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கருவிகள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

டாக்டர் டேங்ஸ் லேப்-உடைய இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஆன்லைனில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னரே அவர்களுக்கு அப்பாயிண்மென்ட் வழங்கப்பட்டு, அழைப்பு விடுக்கப்படுகின்றது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு உதவும் விதமாக சில நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்தவகையில், டாக்டர் டேங்ஸ் லேப் பயனர்களுக்கு சிறப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த ட்ரைவ்-த்ரூ டெஸ்டிங் லேப்பை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








