கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற சொல்லி குதூகலித்த பஸ் ஓட்டுனர்... பின்னர் நடந்தது இதுதான்!
கேரளாவில், கல்லூரி மாணவிகளை பஸ் ஓட்டுனர் ஒருவர் கியர் மாற்றுவதற்கு அனுமதித்து குதூகலித்த வீடியோ வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவையும், அதன் பின் நடந்த விஷயங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொது போக்குவரத்து சாதனைங்களை இயக்குவோருக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. ஆனால், பொது போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வரும் பஸ் ஓட்டுனர்களின் அஜாக்கிரதை, பொறுப்பற்ற தன்மை போன்றவற்றால் பல அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவது வாடிக்கையாவிட்டது.

இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க பஸ் ஓட்டுனர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது. இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த பஸ் ஓட்டுனர் ஒருவர் கல்லூரி மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்து குதூகலிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவிலிருந்து அந்த பஸ் கோவாவிற்கு கல்விச் சுற்றுலா சென்றுள்ளது. அதில், ஏராளமான கல்லூரி மாணவிகள் இருந்துள்ளனர். அப்போது மாணவிகள் சிலரை கியர் மாற்றுவதற்கு அவர் அனுமதித்து இருப்பதையும், அதனை மற்றொருவர் வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது.

போக்குவரத்து நிலைக்கு ஏற்ப பஸ்சின் வேகத்தை வைத்து அவர் கியரை குறைக்கவும், கூட்டுவதற்கும் கூறுவதும், அதற்கு ஏற்ப இரண்டு மாணவிகள் கியர் லிவரை முன் பின் நகர்த்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. மாணவிகளை கியர் மாற்றுவதற்கு அனுமதித்த ஓட்டுனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதை கூட அறியாமல் கியர் மாற்ற அனுமதித்திருப்பது ஓட்டுனரின் அறியாமையை காட்டுவதாக இருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், அந்த பஸ்சை இயக்கியது வயநாடு பகுதியை சேர்ந்த ஷாஜி என்பது தெரிய வந்தது. மேலும், அவருக்கு ஆர்டிஓ அதிகாரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினார்.
இதையடுத்து, அவரிடம் அவர் விசாரணை நடத்தினார். இதில், மாணவிகளை கியர் மாற்ற அனுமதித்தை அவர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. விசாரணை முடிவில், ஓட்டுனர் ஷாஜியின் ஓட்டுனர் உரிமத்தை கல்பெட்டா வட்டார ஆர்டிஓ அதிகாரி ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டுனர் மட்டுமே இயக்குவது உசிதம். ஓட்டுனர் இல்லாமல் அருகில் இருப்பவர்களை கியர் மாற்றுவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதிக்கும்போது வாகனம் எந்த நேரத்திலும் கட்டுப்பாட்டை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். விளையாட்டு வினையாகிவிடும். போன் பேசிக்கொண்டே பக்கத்தில் இருப்பவர்களை ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை கொடுப்பதும் பலரின் வழக்கமாகி இருக்கிறது.

நொடியில் எல்லாம் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டு சாலையில் முழு கவனத்தையும் ஓட்டுனர்கள் செலுத்துவதுடன், வாகனத்தின் முழுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் தங்கள் கையில் வைத்திருப்பது அவசியம்.
போக்குவரத்து விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலீசார் எடுத்து வரும் கடும் நடவடிக்கை குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








