ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்ட் தற்காலிகமாக ரத்து... குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பிய ஆர்டிஓ!
புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் டெஸ்ட் டிரைவ் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் எனும் அவதாரத்தில் மீண்டும் இந்த உலகை அச்சுறுத்த தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் மிக குறைவாக தென்பட்டு வந்த வைரஸ் தொற்று விகிதம் தற்போது பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரி விடுமுறை என பல விதமான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையிலேயே ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைக்கக் கூடிய ஓர் தகவல் வெளி வர தொடங்கியிருக்கின்றது.

ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் டெஸ்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசே வெளியிட்டிருக்கின்றது. தற்போது தலைநகர் டெல்லியில் 10,665 புதிய வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் தற்போது 23,307 பேர் வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆகையால், இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் மூன்றாம் அலைக்கு பாதிக்கப்பட்டு வரும் இந்திய நகரங்களில் ஒன்றாக டெல்லி மாறியிருக்கின்றது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டே வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக டெல்லி ஆர்டிஓ அலுவலகங்களில் தற்காலிக ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்ட்டுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த தகவல் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து காத்திருந்தோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கின்றது.

வைரஸ் பரவல் அதி-விரைவில் பரவிக் கொண்டிருக்கின்ற வேலையில் இந்த நடவடிக்கையை டெல்லி அரசு துரிதமாக எடுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற தொடங்கியிருக்கின்றது. அதேவேலையில், சிலரை இந்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இன்று ஓட்டுநர் உரிமத்திற்கான டெஸ்டிற்கு தயாராக இருந்தவர்களையே இத்தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், டெஸ்ட் ரத்து அறிவிப்பான இன்று (ஜனவரி 06) முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த அறிவிப்பை மாநிலத்தின் இணை ஆணையர் நவ்கேந்த்ரா குமார் சிங் வெளியிட்டார். இதுகுறித்த அறிவிப்பு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

தலைநகர் டெல்லியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டின் பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்படலாம் என அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் காலங்களில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








