உஷார் மக்களே!! ஹெல்மெட் இல்லனா லைசன்ஸ் சஸ்பென்ட்- எங்கு தெரியுமா இந்த சட்டம்?
பயணத்தின்போது ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு வழிவகுக்கும் சட்டம் மிக விரைவில் ஒடிசா மாநிலத்தில் கொண்டுவரப்படவுள்ளது. கூடுதல் விபரங்களை இனி பார்ப்போம்.

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாகனத்தில் எத்தனை பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் இருந்தாலும் ஹெல்மெட் தான் முக்கிய பாதுகாப்பு அரணாகும். பெரிய பெரிய விபத்துகள் பெரும்பாலானவை ஹெல்மெட்டினால் ஒன்றும் இல்லாமல் போய் உள்ளன.

இதனால் தான் அரசாங்கங்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலே போய் ஒடிசா மாநில அரசு, ஹெலெம்ட் அணியவில்லை என்றால் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான சட்டத்தை கொண்டுவர முனைப்பு காட்டி வருகிறது.

இதன் முதல் பகுதியாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி இந்த சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று ஒடிசா அரசு மாநில காவல்துறை மற்றும் போக்குவரத்து ஆணையரை வலியுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.எஸ்.பதி டி.ஜி.பி மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் எழுதி, மாநிலத்தில் ஹெல்மெட் இல்லாத பைக்கர்களின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலும் ஹெல்மெட் சட்டத்தை மீறியதற்காக ஓட்டுனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை மாவட்ட வாரியாக ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒடிசாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் மொத்தம் 11,064 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 4,688 விபத்துகளில் இருசக்கர வாகனங்களும் அடங்குகின்றன. இந்த விபத்துகளில் மொத்தம் 5.333 பேர் கடந்த ஆண்டில் இறந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களை உள்ளடக்கிய விபத்துகளில் 2,398 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2,156 பேர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. ஹெல்மெட் கட்டாயமாக இருந்திருந்தால் இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 194டி-இன்படி, யார் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் மோட்டார்சைக்கிளை ஓட்டுகிறாரோ அல்லது தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதிக்கிறாரோ அவர் சட்டத்தின் 129 வது பிரிவின் விதிகளின்கீழ் ரூ .1,000 அபராதத்துடன் தண்டிக்கப்படுவதுடன் மூன்று மாத காலத்திற்கு அவர் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதற்கே தகுதியற்றவர் என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








