குடிபோதையில் அட்டகாசம் செய்த தொழிலதிபர்... ஆடிப்போன போலீஸ்... அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ
குடிபோதையில் சொகுசு காரில் வந்து அட்டகாசம் செய்த தொழிலதிபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் நேற்று (மே 26) இரவு 7 மணியளவில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் யாரும் வெளியே வரக்கூடாது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டிய தொழிலதிபரை சென்னை காவல் துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த தொழிலதிபரின் பெயர் ஹரீஷ் மேஷ்வானி என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்எல்சி 43 ஏஎம்ஜி கார் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை பிடிப்பதற்காக தற்போது காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி சென்னையில் நேற்று காவல் துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் ஹரீஷ் மேஷ்வானி சிக்கியுள்ளார். அவர் காரை மிகவும் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார்.

எனவே பேரிகார்டுகளை வைத்து காரை நிறுத்துவதற்கு காவல் துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் ஹரீஷ் மேஷ்வானி உடனடியாக காரை நிறுத்தவில்லை. பேரிகார்டு மீது மோதிதான் அவரது கார் நின்றதாக கூறப்படுகிறது. அதன்பின் காரை விட்டு கீழே இறங்கும்படி ஹரீஷ் மேஷ்வானியிடம் காவல் துறையினர் கூறினார்.

ஆனால் இதனை ஹரீஷ் மேஷ்வானி கேட்கவில்லை. நீண்ட நேரமாக காருக்கு உள்ளேயே அமர்ந்திருந்தார். அத்துடன் காரை ரிவர்ஸில் எடுத்து அங்கிருந்து தப்பிக்கவும் ஹரீஷ் மேஷ்வானி முயற்சி செய்தார். அப்போது பின்னால் இருந்த பேரிகார்டுகளில் அவரது கார் மோதியது. இந்த பரபரப்பான சம்பவங்களை நம்மால் வீடியோவில் காண முடிகிறது.

இறுதியாக காரின் கண்ணாடிகளை உடைத்துதான், காவல் துறையினர் ஹரீஷ் மேஷ்வானியை வெளியே வரவழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஹரீஷ் மேஷ்வானி மதுபோதையில் இருந்ததுதான் இந்த சம்பவத்திற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனை உறுதி செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு ஹரீஷ் மேஷ்வானியை காவல் துறையினர் அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ஹரீஷ் மேஷ்வானி மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காகவும் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறான செயல். இதனால் சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும். அதுவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மதிக்காமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது.


Click it and Unblock the Notifications








