உயிர்களை குடிக்கும் ஓவர்ஸ்பீடு: நரகமான நகர சாலைகள்!
சென்னையில் சொகுசு கார்கள் மற்றும் சூப்பர் கார்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்களால் இரவு நேரங்களில் சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆடி கார் ஐஸ்வர்யா, நடிகர் அருண் விஜய் போன்றவர்கள் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதைத்தொடர்ந்து, வழக்கம்போல் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கின. அதிசக்திவாய்ந்த கார்களை வாங்குவோர்க்கு, பாதுகாப்பாக காரை இயக்குவதற்கான பயிற்சிகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், தாறுமாறாக வந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோரிக்ஷாக்கள் மீது மோதியதில், ஒருவர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். மேலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 12 ஆட்டோரிக்ஷாக்களும் கடுமையாக சேதமடைந்தன.

இந்த கோர சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த விகாஸ் ஆனந்த் மற்றும் அவருடன் காரில் வந்த அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரை ஓட்டி வந்த விகாஷ் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்ஷே காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய விகாஸ் ஆனந்த் [22] பிரபல கார் பந்தய வீரர். ஆம், கடந்த மாதம் நிறைவுற்ற MRF Formula 1600 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

இந்த வெற்றியின் மூலமாக உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் இன்டிகார் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் இவர் பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் சிறந்த கார் பந்தய வீரராக விகாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சொகுசு கார்களை ஓட்டுவோருக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அதிசக்திவாய்ந்த கார்களை ஓட்டுவதில் வல்லவரான விகாஸ் ஆனந்தே இவ்வாறு ஒரு கோர விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காரில் இருந்த ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிந்ததால் இருவரும் உயிர் தப்பிவிட்டனர்.

டிராக்கில் ஓட்டுவது போன்றே, தனது ஓட்டும் திறனை சாதாரண சாலையில் காட்ட முயன்றதும், குடிபோதையும் அவரது கண்ணை மறைத்துவிட்டது. இதற்கு ஒருவரின் உயிர் பலிவாங்கப்பட்டு விட்டது. அத்துடன், பலர் காயத்துடனும், தங்களது தினசரி வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோரிக்ஷாக்களையும் பறிகொடுத்து நிற்கின்றனர்.

குடிபோதையில் காரை ஓட்டி இரண்டு உயிர்களை பறித்ததோடு, தனது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி நிற்கிறார் விகாஸ். குடிபோதையும், சமூக பொறுப்பின்மையும் தற்போது சாலையில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி, மும்பை, சென்னை என அனைத்து மெட்ரோ நகரங்களின் கலாச்சார மாற்றத்தால், இரவு மது விருந்துகளின் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இவ்வாறான இரவு மது விருந்துகளே இதுபோன்ற சூப்பர் கார் விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன. இதில், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.

இதுபோன்ற மது விருந்துகளில் குடிப்பவர்களை கார் ஓட்ட அனுமதிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் செய்ய மது விடுதிகளுக்கு அறிவுறுத்துவதம் அவசியம்.

இதுபோன்ற வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே, சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வழிபிறக்கும். அத்துடன் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல இளைஞர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








