காருக்கு உள்ளே ஆட்கள் இருந்தபோது குடிகாரர் செய்த காரியம்! வீடியோவ பாத்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஆடி போயிருச்சு
இந்தியாவில் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலையில் தகராறுகள் (Road Rage) நடைபெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி வருகிறது. இந்த வரிசையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவும் (Video) வெளியாகியுள்ளது.
நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ள சம்பவம் கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று 2 குழுவினர் 2 கார்களில் சாலையிலேயே பந்தயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் 2 குழுவினரும் கார்களை நிறுத்தி விட்டு, வாய் தகராறில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

சற்று நேரத்தில் இந்த தகராறு, மிகப்பெரிய மோதலாக மாறியுள்ளது. நமக்கு கிடைத்துள்ள வீடியோவில் ஒரு நபர், பெரிய கல்லை தூக்கி போட்டு, மாருதி சுஸுகி ரிட்ஸ் (Maruti Suzuki Ritz) காரின் கண்ணாடிகளை உடைப்பதை பார்க்க முடிகிறது. அவர் இந்த விபரீதத்தை செய்த நேரத்தில், காருக்கு உள்ளே ஆட்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கலவரங்களும் பட்டப்பகலில் நடைபெற்றன என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். அப்போது அவ்வழியாக சென்ற நபர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க, அது தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. இது தொடர்பாக கொடுங்கலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அஸீம் என்ற முக்கிய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 குழுவினருக்கும் இடையே முன் விரோதம் எதுவும் இல்லை என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டபோதுதான், அது தகராறாக மாறியுள்ளது. இந்த 2 குழுவினரின் 2 கார்களையும் காவல் துறையினர் தற்போது அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் குடிபோதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் இந்த பிரச்னைக்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைபோல், இந்திய சாலைகளில் தற்போது வாகன ஓட்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில் நடைபெற்ற ஒரு சில சம்பவங்களை சமீபத்தில் நாங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், ஒரு சில விஷயங்களை பின்பற்றுவது நல்லது. முதலில் ரிலாக்ஸாக இருங்கள். ரிலாக்ஸாக இருந்தாலே, பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு விடும். அதையும் மீறி டென்ஷன் ஆன சூழல் ஏற்பட்டால், காரில் ஏசி-யை ஆன் செய்யுங்கள். இதமான பாடல்களை கேளுங்கள்.
இவை உங்களை வெகு விரைவாக ரிலாக்ஸ் ஆக மாற்றி விடும். அதேபோல் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற தவறினால், மற்றவர்கள் உங்கள் மீது கோவப்பட்டு, வார்த்தைகளை விடக்கூடும். இது கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதே சமயம் மற்றவர்கள் தவறு செய்தால், அதனை மன்னித்து பழகுங்கள். இல்லாவிட்டால் அது உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி, பிரச்னைகளுக்கு காரணமாக அமையலாம். இதுதவிர எங்கு செல்வதாக இருந்தாலும் சற்று முன் கூட்டியே கிளம்புவதன் மூலம், நீங்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். இந்த வழிகளை எல்லாம் பின்பற்றினால், உங்கள் பயணம் மற்றவர்களுடன் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் சுமூகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications