நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த போதை ஆசாமி! காரை எங்கு ஓட்டினார்னு தெரிஞ்சா கோவத்தோட உச்சிக்கே போயிருவீங்க!
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அதற்கு பெரிய அளவில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.
தொடர்ந்து பலர் குடிபோதையில் நிதானம் இல்லாமல் வாகனங்களை இயக்கி, சாலை விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டேதான் உள்ளனர். இவ்வளவு நாட்களாக குடிபோதை ஆசாமிகள் சாலையில்தான் வாகனங்களை இயக்கி கொண்டிருந்தனர். ஆனால் கேரளாவை சேர்ந்த ஒருவர் தற்போது ஒரு படி மேலே போய் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டியுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாசன். இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அளவு கடந்த குடிபோதையில் இருந்தார். அப்போது காரை சாலையில் ஓட்டுவதற்கு பதிலாக அங்கு இருந்த ரயில்வே தண்டவாளத்தில் ஓட்டி சென்றார். ஆனால் சிறிது தூரம் சென்ற உடனேயே கார் ஆஃப் ஆகி விட்டது.
அங்கு இருந்த ரயில்வே கேட் கீப்பர் மற்றும் உள்ளூர் மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் இதுகுறித்து உடனடியாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில், ஜெயபிரகாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது பின்வருமாறு:

ஜெயபிரகாசன் அளவு கடந்த மது போதையில் இருந்தார். இதன் காரணமாக சாலைக்கு பதிலாக ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்று விட்டார். இதற்காக அவரை கைது செய்துள்ளோம். அத்துடன் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் துறை அதிகாரிகள் கூறினர்.
காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜெயபிரகாசனுக்கு தற்போது 49 வயதாகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது நமக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
அதுவும் ரயில்வே தண்டவாளத்தில் காரை ஓட்டுவது போன்ற விஷயங்கள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். இது மிகவும் பயங்கரமான ரயில் விபத்துக்களை ஏற்படுத்தலாம். ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து தற்போதுதான் நாட்டு மக்களும், உறவினர்களை பறிகொடுத்த குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற கொடூரங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டுமென்றால், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது தவிர்ப்பதும் அவசியம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முடிந்தவரை மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதையும் தாண்டி மது அருந்தி விட்டால், வாகனங்களை இயக்காதீர்கள். பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் மூலமாக வீட்டிற்கு சென்று சேரலாம். அல்லது ஓலா, உபேர் போன்ற கேப் சேவைகளை கூட பயன்படுத்தலாம்.
அல்லது சொந்த வாகனத்தில்தான் செல்ல வேண்டும் என்றால், மது அருந்தும் பழக்கம் இல்லாத ஒருவரை உடன் வைத்து கொள்ளலாம். அவர் உங்களது நம்பிக்கைக்கு உரிய நண்பராகவோ அல்லது தெரிந்தவராகவோ இருக்கலாம். அவர் உங்களை பத்திரமாக வீடு சென்று சேர்த்து விடுவார். இதை பின்பிற்றினாலே, குடிபோதையில் நிகழும் விபத்துக்களை ஓரளவிற்கு குறைக்க முடியும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








