ஒரே நாளில் வாழ்க்கை தலைக்கீழா மாறிடுச்சு! கட்டுக்கடங்காத சொத்து இருந்தும் காப்பாற்ற முடியல, புகாட்டி கார் ஓனர்
இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் பலர் தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெற்றிக்கரமாக தொழில்களை நடத்திவரும் இந்தியர்களை பரவலாக அதிகம் பார்க்க முடியும். இவ்வாறு வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்க முடியாத விலையுயர்ந்த கார்களை அங்கு வாங்கி பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடியும். அவ்வாறு துபாயில் செட்டில் ஆகி, உலகின் மிக வேகமான புகாட்டி (Bugatti) காரை பயன்படுத்தி வரும் இந்தியர், பல்விந்தர் சிங் சாஹ்னி (Balvinder Singh Sahni) ஆவார்.
துபாயில் வசித்துவரும் பல்விந்தர் சிங் சாஹ்னி, அவரது கருப்பு நிறத்திலான புகாட்டி சிரோன் (Chiron) கார் மூலமாக பிரபலமானவராக விளங்குகிறார். துபாயில் ஆர்.எஸ்.ஜி க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் (RSG Group of Companies) என்கிற பெயரிலான நிறுவனத்தை நிறுவியவரான பல்விந்தர் சிங் சாஹ்னி பரவலாக அபு சபா (Abu Sabah) என அழைக்கப்படுகிறார்.

பெரும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சொத்துக்களை பராமரிப்பதுதான் ஆர்.எஸ்.ஜி க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் முக்கிய பணி ஆகும். இந்தியாவை சேர்ந்த பல்விந்தர் சிங் நிறுவிய இந்த நிறுவனத்தின் நெட்வொர்க் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டை தாண்டி அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் உள்ளது. இந்தியாவும் உள்பட.
இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வகித்துவரும் பல்விந்தர் சிங், பெரும்பாலான தொழிலதிபர்களை போல விலையுயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துவதை மிகவும் விரும்பக்கூடியவர் ஆவார். புகாட்டி சிரோன் கார் ஆனது இவரிடம் உள்ள மிகவும் விலையுயர்ந்த கார் ஆகும். சிரோன் காரின் மிகவும் அரிதான நோய்ர் (Noir) வெர்சனை இவர் கொண்டுள்ளார். இதனை உலகம் முழுவதுமே வெறும் 20 கார்கள் மட்டுமே புகாட்டி நிறுவனம் உருவாக்கியது.

துபாயின் பிரபலமான பால்ம் ஜூமேரா பகுதியில் உள்ள பல்விந்தர் சிங் சாஹ்னியின் வீட்டிற்கு உள்ளே இந்த புகாட்டி கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் இருக்கும் கெட்ட ராசிகளை வெளியேற்றும் விதமாக இவ்வாறு கருப்பு நிறத்திலான புகாட்டி காரை வீட்டிற்குள் பல்விந்தர் பார்க் செய்து வைத்துள்ளார். இந்த புகாட்டி கார் மட்டுமில்லாமல், கல்லீனன் (Cullinan) மற்றும் பாண்டோம் 8 (Phantom 8) போன்ற சில ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களும் இவரிடம் உள்ளன.
இதில் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு சுமார் ரூ.76 கோடி அளவிற்கு செலவு செய்து 'D5' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட்டை (Fancy Number Plate) துபாயில் பல்விந்தர் சிங் சாஹ்னி வாங்கியது இந்தியா வரையில் எதிரொலித்தது. அதாவது, காரின் விலையை காட்டிலும் அதற்கு வாங்கப்பட்ட ஃபேன்சி நம்பர் பிளேட்டின் விலை அதிகம் ஆகும்.
துபாயில் வசிக்கும் இந்த இந்திய தொழிலதிபரை பற்றி ஏன் தற்போது பார்க்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆர்.எஸ்.ஜி க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனர் பல்விந்தர் சிங் சாஹ்னி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் இவரை துபாய் குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர். துபாய் நீதிமன்றம் பல்விந்தர் சிங்கிற்கு 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.
அத்துடன், இந்த தொழிலதிபரிடம் இருந்து சுமார் 15 கோடி திர்ஹாம் (ரூ.344 கோடி) மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 15 கோடி திர்ஹாம் அளவிலான பணத்தை சட்டத்திற்கு விரோதமாக சந்தேகத்திற்கு உரிய நிறுவனங்களிடம் இருந்து தொழிலதிபர் பல்விந்தர் சிங் சாஹ்னி பெற்றது தெரியவந்ததை அடுத்து இவ்வாறான தீர்ப்பை துபாய் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல்விந்தர் சிங் சாஹ்னியிடம் இருக்கும் சொத்துக்கு 15 கோடி திர்ஹாம் எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. ஆனால், 5 வருட சிறைத்தண்டனை என்பதுதான் அவருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், இந்த 5 வருடங்களில் அவரது கட்டுக்கடங்காத சொத்துக்கள் என ஆகப் போகின்றன என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல், பல்விந்தரின் விலையுயர்ந்த புகாட்டி சிரோன் காரை யார் பராமரிக்க போகிறார் என்பதும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








