உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் அமைகிறது
உலகின் மிக முக்கிய சுற்றுலா மற்றும் வர்த்தக ஸ்தலமாக விளங்கும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் அமைய உள்ளது.
தற்போது செயல்பட்டு வரும் அல் மகதூம் விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக விரிவாக்கம் செய்வதற்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அல் மகதூம் விமான நிலையம்
கடந்த ஆண்டு துபாயில் 2வது புதிய விமான நிலையம் திறக்கப்பட்டது. அல் மகதூம் என பெயரிடப்பட்ட இந்த விமான நிலையத்தை தற்போது உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய துபாய் அரசு முடிவு செய்துள்ளது.

முதலீடு
32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் துபாய் அல் மகதூம் விமான நிலையம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மிகப்பெரிய கட்டுமான திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

மிகப்பெரிய விமான நிலையம்
கடந்த ஆண்டு நிலவரப்படி 94.4 மில்லியன் பயணிகள் பயன்படுத்திய அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தில் உள்ளது. ஆனால், விரிவாக்கப் பணிகள் முடிந்தபின் துபாய் அல் மகதூம் விமான நிலையம் ஆண்டுக்கு 200 மில்லியன் பயணிகள் வந்துசெல்லும் வசதிகொண்டதாக அமைக்கப்பட உள்ளது.

7வது இடத்தில்
தற்போது அல் மகதூம் விமான நிலையம் உலகின் 7வது பெரிய விமான நிலைய அந்தஸ்தில் உள்ளது. இதனை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

கால அளவு
அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் முதல்கட்ட விரிவாக்கப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையம் 5 ஓடுபாதைகள் கொண்டதாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். நூற்றுக்கும் அதிகமான பெரிய விமானங்களை நிறுத்துவதற்கான வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது.

உலக வர்த்தக கண்காட்சி
2020ம் ஆண்டு துபாயில் வர்த்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதற்குள் முதல்கட்ட பணிகளை நிறைவு செய்துவிடவும் துபாய் அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அது சவாலானது என்று துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








