வாகனத்தில் அழுக்கு படிந்திருந்தால் கூட இனி கடும் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் தலை சுற்றி விடும்
வாகனத்தில் அழுக்கு படிந்திருந்தால் கூட அதன் உரிமையாளர்கள் இனி கடும் அபராத தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் எவ்வளவு என தெரிந்தால் உங்களுக்கு ஒரு நிமிடம் தலை சுற்றி விடும்.

சராசரி மனிதர்களை பொறுத்தவரை சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவுகளில் ஒன்று. சிறுக சிறுக சேமித்துதான் அவர்கள் தங்களின் வாழ்நாள் கனவை எட்டுகின்றனர். எனவே அவர்களை பொறுத்தவரை கார் என்பது, மிகப்பெரிய முதலீடு. ஆனால் சொந்தமாக காரை வாங்கியதுடன் நின்று விடக்கூடாது.

அதனை முறையாக பராமரிக்க வேண்டும். கார்களை பராமரிப்பதை ஒரு கலை என்றும் சொல்லலாம். சிலர் மிகுந்த சிரத்தை எடுத்து, கார்களை பராமரிப்பார்கள். ஓய்வு நேரங்களில் கார்களை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள். இதனால் வாங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட, அவர்களின் கார் எப்போதும் புதிது போலவே இருக்கும்.

ஆனால் ஒரு சிலர் காரை வாங்கியதுடன் நின்று விடுகிறார்கள். அதனை ஒழுங்காக பராமரிப்பது கிடையாது. காரை அவ்வப்போது துடைப்பதற்கு கூட அவர்களுக்கு நேரமிருக்காது. எனவே அவர்களின் கார் அழுக்கு படிந்து காணப்படும். இதன் காரணமாக புதியதாக வாங்கியிருந்தாலும் கூட, பழைய கார் போல் காட்சியளிக்கும்.

அத்தகைய நபர்களுக்கு இனி சிக்கல்தான். ஆம், பொது வாகன நிறுத்துமிடங்களில் இனிமேல் அழுக்கு படிந்த கார்களை நிறுத்த கூடாது. மீறி நிறுத்தினால், கடும் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும். அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த கடுமையான விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது இந்தியாவில் அல்ல. துபாயில்.

மிக நீண்ட நாட்களாக கழுவப்படாத அழுக்கு படிந்த கார்களை பொது வாகன நிறுத்துமிடங்களில் விட்டு செல்லும் நபர்களுக்கு இனி 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என துபாய் முனிசிபாலிட்டி தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. திர்ஹம் என்பது ஐக்கிய அரபு எமீரகத்தின் கரன்ஸி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய மதிப்பில் கணக்கிட்டால் அபராத தொகை தோராயமாக 10 ஆயிரம் ரூபாய். இந்த அதிரடி உத்தரவை துபாய் அதிகாரிகள் பிறப்பித்திருப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்று தெரியுமா? இதுகுறித்து துபாய் அதிகாரிகள் கூறுகையில், ''இந்த அழுக்கான கார்கள் துபாய் நகரின் அழகான தோற்றத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் உள்ளன.

எனவேதான் இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்றார். அழுக்கான கார்கள் மீது மட்டுமல்லாது, சேதாரம் அடைந்த கார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்தகைய கார்களை குறிவைத்து அதிகாரிகள் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். அழுக்கான மற்றும் சேதாரம் அடைந்த கார்கள் கண்டறியப்பட்டால், அதன் விண்டுஷீல்டில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

இதன்பின் கார் உரிமையாளர்களுக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் காரை சுத்தம் செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் மூலம் அந்த கார் பறிமுதல் செய்யப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிலளிக்க மறுத்தால், அதிகாரிகளால் கார் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்கிராப் யார்டுக்கு கொண்டு செல்லப்படும்.
அதன்பின்பும் காரின் உரிமையாளர் அபராத தொகையை செலுத்த மறுத்தால், ஏலம் மூலமாக கார் விற்பனை செய்யப்பட்டு விடும் என துபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்தால், நம்ம ஊரில் எத்தனை அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பது என நீங்கள் நினைப்பது நன்றாகவே புரிகிறது!!

அது இருக்கட்டும். உங்கள் வாகனத்தை முறையாக பராமரிக்காவிட்டால், அதன் வெளிப்புறத்தில் துருப்பிடித்து விடும் அபாயம் உள்ளது. எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் ஓய்வு நேரத்தில் வாகனத்தை கழுவி சுத்தம் செய்யுங்கள். வாகனத்தின் வெளிப்புறத்தில் துருப்பிடிப்பதை தடுக்க இதுவே மிக எளிமையான வழி.


Click it and Unblock the Notifications








