நம்ம ஊர் போலீசாருக்கு எல்லாம் இது எட்டா கனி - மாநில அரசு தான் எதாவது பார்த்து செய்யனும்... வேற லெவலில் துபாய்!
உலகில் எத்தனை எலக்ட்ரிக் நிறுவனங்கள் இருந்தாலும், டெஸ்லா (Tesla) கொஞ்சம் ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முக்கிய காரணம், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மற்றும் அவரது புது, புது திட்டங்கள் ஆகும். உலகளவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் டெஸ்லாவில் தனது புதுமையான ஐடியாக்களை அவ்வப்போது உட்படுத்துவதை எலான் மஸ்க் எப்போதும் மறந்தது இல்லை. சமீப காலத்தில் இவரது ஐடியாவில் உருவாக்கப்பட்ட தரமான எலக்ட்ரிக் கார், சைபர்டிரக் (Cybertruck) ஆகும்.
மிகவும் சிம்பிளான டிசைனில் வடிவமைக்கப்படும் டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தை பார்த்தாலே மிகவும் வலிமையான வாகனம் என்கிற உணர்வு நமக்கு தானாக ஏற்படுகிறது. அந்த அளவிற்கு, அதிக இடைவெளிகள் இல்லாமல் நன்கு மூடப்பட்ட வாகனமாக சைபர்டிரக் உருவாக்கப்படுகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சைபர்டிரக்கின் தோற்றத்தில் உலகில் தற்போதைக்கு வேறெந்த காரும் விற்பனையில் இல்லை.

மிகவும் வலிமையான எலக்ட்ரிக் வாகனமாக உருவாக்கப்படுவதால், நிறைய நாடுகளில் இராணுவத்திலும், போலீஸ் துறையிலும் டெஸ்லா சைபர்டிரக் வாகனங்களை விரைவில் காண்போம் என நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் அவ்வப்போது கூறிவந்தோம். இந்த நிலையில் எங்களது கூற்றுப்படி, துபாய் போலீசார் டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தை வாங்கியுள்ளனர்.
உலகளவில் பல்வேறு லக்சரி கார்களை வைத்திருக்கும் போலீஸ் துறையாக கருதப்படுவது துபாய் போலீஸ் துறை ஆகும். ஏனெனில், இவர்களிடத்தில் பல்வேறு லக்சரி கார்கள் உள்ளன. இருப்பினும், அவ்வப்போது புது, புதுசா விலையுயர்ந்த கார்களை துபாய் போலீசார் வாங்குவதை நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், டெஸ்லா சைபர்டிரக்கை தற்போது தங்களது ரோந்து பணிகளுக்காக துபாய் போலீசார் வாங்கியுள்ளனர்.

டெஸ்லா சைபர்டிரக்கை வாங்குவோம் என 2019ஆம் ஆண்டிலேயே துபாய் போலீசார் தெரிவித்து இருந்தனர். தற்போது அதனை நிஜமாக்கி உள்ளனர். இதனை எக்ஸ் தளத்தில் படங்களுடன் தெரிவித்துள்ள துபாய் போலீசார், "எதிர்கால வடிவமைப்பை கொண்ட நவீன எலக்ட்ரிக் காரை துபாய் போலீஸ் துறையின் பொது படை அதன் சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு ரோந்துப் படையில் சேர்த்துள்ளது" என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த எக்ஸ் பதிவின்படி பார்க்கும்போது, சைபர்டிரக் வாகனம் துபாய் போலீஸ் படையில் சிறப்பு பிரிவு போலீசாருக்காக இல்லாமல், பொது பிரிவு போலீசாருக்காக வாங்கப்பட்டுள்ளது. அதாவது, துபாய் சாலைகளில் போலீசாரின் சைபர்டிரக்கை இனி அடிக்கடி பார்க்க முடியும். டெஸ்லா சைபர்டிரக்கை ரோந்து பணிகளுக்காக இதுவரையில் உலகின் எந்த போலீசாரும் வாங்கியதுபோல் செய்திகள் இல்லை. ஆதலால், எங்களுக்கு தெரிந்தவரையில் இந்த விஷயத்தில் துபாய் போலீசார் தான் ஃபர்ஸ்ட்.
இதன் காரணமாகவே, துபாய் போலீசாரின் இந்த சமீபத்திய எக்ஸ் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாக, இந்த பதிவு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கின் கவனத்திலும் பட்டது. இதற்கு எலான் மஸ்க், "கூல்" என பதிவிட்டு, சிரிப்பு ஸ்மைலியை கடைசியில் போட்டுள்ளார். மேலும், துபாய் போலீசாரின் பதிவிற்கு சைபர்டிரக் காருக்கான எக்ஸ் அக்கவுண்ட்டில் இருந்தும் கமெண்ட் செய்யப்பட்டுள்ளது.
சைபர்டிரக்கின் எக்ஸ் பதிவில், "பார்க்க மிகவும் அருமை - நம்பிக்கைக்கு நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இல்லாததால், சைபர்டிரக்கும் விற்பனையில் இல்லை. அமெரிக்காவில், 2 எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3 எலக்ட்ரிக் மோட்டார் என 2 விதமான வெர்சன்களில் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 3-மோட்டார் வெர்சனில் வாகனத்தில் இருந்து அதிகப்பட்சமாக 834 எச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில், டெஸ்லா சைபர்டிரக் ஆனது வேற்று கிரகத்தில் இருந்து வந்த வாகனம் போன்று உள்ளது. இத்தகைய வாகனத்தை தங்களது ரோந்து படையில் வைத்திருந்தால், அது துபாய் போலீசாருக்கு தான் பலம் ஆகும். அதுமட்டுமின்றி, சைபர்டிரக்கை முதலாவதாக வாங்கிய போலீசார் என்கிற பெருமையும் துபாய் போலீசாருக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








