துபாயில் டிரைவரில்லா பஸ் சோதனை ஓட்டம்!
உலகம் முழுவதும் பல நாடுகள் டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், உலகின் மிக முக்கிய சுற்றுலா நகரமான துபாயும் இணைந்துள்ளது.
ஆம், அங்கு டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி மினி பஸ்சின் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த பஸ்சின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, அடுத்த ஒரு மாத காலத்திற்கு, இந்த சோதனை ஓட்டம் நடக்கிறது.

துபாயில் அமைந்திருக்கும் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் காலிபாவின் அருகிலுள்ள முகம்மது பின் ரஷீத் போலிவார்டு மற்றும் விதா டவுடன்டன் துபாய் ஓட்டல் இடையிலான 700 மீட்டர் நீளம் கொண்ட தடத்தில் இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் நடக்கிறது. இதுதான் துபாயின் நீளமான நடைபாதை தடமாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த ஆளில்லாமல் இயங்கும் மினி பஸ்சை EZ10 என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, டிரைவருக்கான கேபின் இல்லாததால், எளிதாக 10 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.

இந்த பஸ்சை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஈஸி மைல் நிறுவனமும், துபாயை சேர்ந்த ஆம்னிக்ஸ் என்ற நிறுவனமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.

இந்த பஸ் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ் மாடலாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகம் வரை செல்லும்.

வழியில் பாதசாரிகள் குறிக்கிட்டாலும், தடைகள் இருந்தாலும் சென்சார் மற்றும் கேமராக்களின் உதவியுடன் இந்த பஸ் தானாக வேகத்தை குறைத்து நின்றுவிடும். தடை அகன்ற உடன் மீண்டும் இயங்கும். இந்த தொழில்நுட்பம் முன்மாதிரியாக இருக்கும் என்றும் இதனை உருவாக்கிய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

இந்த பஸ்சில் இலவச பயண வாய்ப்பையும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சரியான நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடும் வசதியும் உள்ளது.

உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் துபாய் நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

வரும் 2030ம் ஆண்டிற்குள் துபாயின் போக்குவரத்தில் கால் பங்கு அளவிற்கு இதுபோன்ற தானியங்கி போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தும் நோக்கில் இந்த பஸ்சின் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டிருப்பதாக துபாய் போக்குவரத்து நிறுவனத்தின் அதிகாரி அகமது பரோஸ்யான் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








