கனவு நனவாகிறது... உலகின் முதல் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் துபாயில் துவங்கியது!
துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
உலகின் முதல் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் துபாயில் துவங்கி இருக்கிறது. எதிர்கால போக்குவரத்து துறையை புதிய பரிமாணத்தில் எடுத்துச் செல்வதற்கான பிள்ளையார் சுழியாக அமைந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடாங்கமால் சென்று கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. இருப்பினும், பெரு நகரங்களில் விரைவான போக்குவரத்த வழங்குவதற்காக மெட்ரோ ரயில், மோனோ ரயில் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றைவிட வேகமாக செல்வதற்கான போக்குவரத்து தீர்வுகளிலும் விஞ்ஞானிகள் மூழ்கி இருக்கின்றனர். அந்த வகையில், பெரு நகரங்களில் பறக்கும் சாதனத்தை வைத்து டாக்சி சேவையை வழங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

பறக்கும் கார்கள் தயாரிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றை மேலே எழும்பி செல்வதற்கு சிறிய ஓடுபாதை தேவை. ஆனால், அதுவும் இல்லாமல், நின்ற இடத்திலிருந்து மேலே எழும்பி பறக்கும் திறன் படத்தை பயணிகள் ட்ரோன் சாதனங்களை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த வோலோகாப்டர் நிறுவனம் உருவாக்கிய பயணிகள் ட்ரோன் சாதனம் துபாயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதுவரை பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், ராணுவ கண்காணிப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்த ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் இந்த ட்ரோன் சாதனம் முதல்முறையாக பயணிகள் போக்குவரத்திலும் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட்போனில் இருக்கும் இடத்தையும், செல்லும் முகவரியையும் பதிவு செய்த சில நிமிடங்களில் வாடகை கார்கள் வருவது போலவே, இந்த ட்ரோன்களும் சில நிமிடங்களில் உங்களது வீட்டருகே வந்து பிக்கப் செய்து கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக கொண்டு சென்று இறக்கிவிடும்.

இந்த ட்ரோன்களுக்கு ஓடுபாதை எதுவும் தேவையில்லை. சமதள பகுதி இருந்தால் போதுமானது. எங்கு வேண்டுமானாலும் வந்து இறங்கி, அப்படியே மேலே எழும்பி விடும்.

துபாயில் சோதனை செய்யப்படும், இந்த வோலோகாப்டர் ட்ரோன் சாதனத்தில் இரண்டு பேர் பயணிக்கலாம். அவசர காலத்தில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக பாராசூட்டும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஓட்டுனர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாம் தானியங்கி முறையில் இயங்கும். இந்த ட்ரோன் சாதனம் பேட்டரியில் இயங்கும் மின்சார பறக்கும் வாகனமாக இருக்கும். இந்த ட்ரோனில் ரோட்டர்கள் எனப்படும் 18 விசிறிகள் மேல் புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ட்ரோன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பறக்கும். இந்த ட்ரோனில் இருக்கும் பேட்டரி மூலமாக 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறனை பெற்றிருக்கிறது.

தற்போதுள்ளதைவிட, உண்மையான பயணிகள் பயன்பாட்டுக்கான வோலோகாப்டர் ட்ரோன் அதிக திறன் வாய்ந்த பேட்டரி திறன் வாய்ந்ததாகவும், அதிக நேரம் பறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டத்தின் முதல் நாளன்று, 200 மீட்டர் உயரத்தில் இந்த ட்ரோன் பறக்கவிடப்பட்டது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் கால் போக்குவரத்தை ஆள் இல்லா வாகனங்கள் மூலமாக இயக்குவதற்கு துபாய் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆள் இல்லாமல் இயங்கும் ட்ரோன் சாதனத்தின் சோதனை ஓட்டமும் துவங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








