மணிக்கு 1,200 கிமீ வேகம்... துபாய்- அபுதாபி இடையே உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து!
மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணத்தை அளிக்கும் உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து துபாய்- அபுதாபி இடையே துவங்கப்பட உள்ளது.
மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணத்தை அளிக்கும் உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து துபாய்- அபுதாபி இடையே துவங்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகி இருக்கிறது.
விமானங்களைவிட அதிவேக போக்குவரத்தாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய ஹைப்பர்லூப் போக்குவரத்து குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து நிறுவனத்துடன் துபாய் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டடத்தின் மேல் தளத்தில் துபாய்- அபுதாபி இடையிலான ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

2013ம் ஆண்டு டெஸ்லா கார் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் இந்த புதுமையான ஹைப்பர்லூப் போக்குவரத்து குறித்த வரைவு திட்டத்தை முதல்முறையாக வெளியிட்டார். அதன்பிறகு, இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு வரைவு திட்டத்தை மேம்படுத்தி தருவதற்காக போட்டி ஒன்றையும் நடத்தினர்.

அதில், சிறந்த ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, தற்போது அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு சோதனை மையத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஹைப்பர்லூப் ஒன் என்ற பெயரில் செயல்படும் நிறுவனம் இந்த கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

வெற்றிடமாக்கப்பட்ட பிரம்மாண்டமான ராட்சத குழாய்களுக்குள் கேப்சூல் எனப்படும் ரயில் பெட்டி போன்ற சாதனங்களை குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக அதிவேகத்தில் செலுத்தும் புதுமையான போக்குவரத்து சாதனமாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட இரும்புத் தூண்கள் மீது அமைக்கப்படும் ராட்சத குழாய்களுக்குள் பயணிகள் அமர்ந்திருக்கும் கேப்சூல் போன்ற பெட்டிகள் மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்கும். இது மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாகவும் சொல்லப்படுகிறது. நிலநடுக்கத்தில் கூட இதன் கட்டமைப்பு பாதிக்காது.

பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தையும் சேர்த்தே செய்ய முடியும். அதுதவிர, எதிர்காலத்தில் ஹைப்பர்லூப் பெட்டிகள் உள்ள பயணிகள் அமர்வதற்கான பாட் எனப்படும் சிறிய பெட்டிகள் நேராக விரும்பும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.

இதனால், இறங்கியவுடன் பிளாட்ஃபார்மில் நடந்து டாக்சி பிடிக்கும் தொல்லையும் இருக்காது. நேரம் வெகுவாக மிச்சப்படும் என்று தெரிகிறது. ஆனால், சில பாட் எனப்படும் பெட்டிகள் ஒன்று சேர்த்து அனுப்பப்படும்.

மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து இயக்க முடியும். இதனால், நீண்ட தூர நகரங்களுக்கு இடையில் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து வரப்பிரசாதமாக அமையும். இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம் இப்போது சோதனை கட்டத்தில்தான் உள்ளது.

ஆனால், துபாய்- அபுதாபி இடையில் வரும் 2021ம் ஆண்டிற்குள் இந்த போக்குவரத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான 154 கிமீ தூரத்தை இந்த ஹைப்பர்லூப் ஒன் போக்குவரத்து மூலமாக வெறும் 12 நிமிடங்களில் கடக்க முடியும்.

தற்போது விமானத்தில் பயணிப்பதைவிட இது மிக மிக குறைவான நேரமாக இருக்கும். இதனால், துபாய்- அபுதாபி இடையே அமைக்கப்பட உள்ள ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பு உலக போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்தில் துபாயை சேர்ந்த டிபி வேர்ல்டு குரூப் நிறுவனம் 50 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








