இந்தியாவில் இலக்கை நெருங்க முடியாமல் திணறும் அமேசான், ஃப்ளிப்கார்ட்... நல்லது பண்ண நினைச்சும் முடியல!
இந்தியாவில் இலக்கை நெருங்க முடியாமல் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் தளங்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

அண்மைக் காலங்களாக உலகையே அச்சுறுத்தும் வகையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகின்றது. தொழில்துறை வளர்ச்சி, எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் உள்ளிட்ட பல காரணங்களால் சுற்றுச் சூழல் அதிகளவில் பாதித்து வருகின்றது. எனவே, மாசுபாட்டைக் குறைக்கும் விதமான முயற்சியில் உலக நாடுகள் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றன.

இதனடிப்படையில், பெட்ரோலியத்தால் (பெட்ரோல், டீசல் ) இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சிகளும் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதன் வாயிலாக மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்க முடியும் என நம்பிக்கை.

எனவேதான் காற்றைக் கெடுக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக மின் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியில் தங்களின் பங்களிப்பையும் வழங்கும் நோக்கில் சில தனியார் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியிருக்கின்றன.

அதாவது, வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும் தங்களின் வாகனங்களை மின்சார வாகனமாக அப்கிரேட் செய்ய இருப்பதாக அறிவித்தன. இதுமாதிரியான அறிவிப்பை வெளியிட்ட நிறுவனங்களில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டும் அடங்கும். இவை படிப்படியாக தங்களின் டெலிவரி சேவையில் பயன்படுத்தி வரும் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்ற இருப்பதாக அறிவித்தன.

இந்த இலக்கையே இந்தியாவில் எட்ட முடியாமல் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் சிக்கலைச் சந்தித்து வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக அமேசான், ஃப்ளிப்கார்ட் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இவற்றின் டெலிவரி வாகனங்களும் நாட்டில் சற்று அதிகமாக உள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை பெட்ரோலிய எரிபொருளால் இயங்கக் கூடியவையாக இருக்கின்றன. இவற்றை மின் வாகனங்களாக மாற்றுவதிலேயே பெரும் தடுமாற்றத்தை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்டு நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. இதற்கு இந்தியாவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது.

ஆமாங்க, நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இருப்பதைப் போல கட்டமைப்பு வசதிகள் மின் வாகனங்களுக்கு இல்லை என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இத்துடன், தனியார் நிறுவனங்களும் நாட்டில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகையால், இப்போது சார்ஜிங் மையங்கள் சற்று லேசாக அதிகரித்து காணப்படுகின்றது. ஆனால், அது பெட்ரோல், டீசல் பங்க்குகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவே. இதுமட்டுமின்றி, மின் வாகனங்களின் உற்பத்தி குறைவாக இருக்கின்றதால், அவற்றை பெறுவதிலும் இந்தியாவில் மிகப் பெரிய சிக்கல் நிலவுகின்றது.

ஆமாங்க, நாட்டில் வெகு சில நிறுவனங்களே டெலிவரி துறைக்கு பயன்படுத்தக் கூடிய வகையிலான மின் வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், நாட்டிலோ பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மஹிந்திராவோன் ட்ரியோ ஜோர் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

இதன் விலை ரூ. 2,73,000 ஆகும் ஆகும். இதுபோன்ற வாகனங்கள் மிக குறைவான அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆகையால் அவற்றைப் பெறுவதில் மிகப் பெரிய சிக்கல் நிலவுகிறது. ஏனெனில், அமேசான் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் மின் வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றன.

இதேபோல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் 25 ஆயிரம் மின்சார வாகனங்களை வரும் 2030ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அனைத்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பெரிய பெரியளவில் இலக்கை நிர்ணயித்திருக்கின்றன. ஆனால், நாட்டில் மின் வாகன உற்பத்தியோ மிகக் குறைவாக தென்படுகின்றது.

எனவே தங்களின் இலக்கை எட்டுவதில் மாபெரும் சிக்கலை ஆன்லைன் ஜாம்பவான் நிறுவனங்கள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகியவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. தற்போது, இந்தியாவில் மஹிந்திரா, ஹீரோ போன்ற ஒரு சில நிறுவனங்களே வர்த்தக துறைக்கான இரண்டு மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








