ஏற்கனவே கட்டணம் அதிகம்! இதுல இது வேறயா! டோல்கேட்டை கடக்கும் வாகன உரிமையாளர்களை புலம்ப வைத்த அதிரடி திட்டம்!
இந்தியாவில் பொது சாலைகளில் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் (Insurance) கட்டாயம். மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 146-ன் படி, பொது சாலைகளில் இயங்கும் வாகனங்கள் அனைத்திற்கும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் காலாவதியான இன்சூரன்ஸ் உடன் வாகனங்களை இயக்குகின்றனர். இது பல்வேறு வகைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை கண்டறிய தற்போது அதிரடியான நடைமுறை ஒன்று அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி டோல்கேட்களில் (Toll Gates), இ-டிடெக்ஸன் சிஸ்டம் (E-Detection System) என்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது டோல்கேட்களை கடக்கும் வாகனங்களை ஆராயும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு இன்சூரன்ஸ் உள்ளதா? இல்லையா? என்பதை இது கண்டறியும். இன்சூரன்ஸ் இருந்து விட்டால் பிரச்னை.

ஒரு வேளை இன்சூரன்ஸ் இல்லாவிட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு பிரச்னைதான். முதல் முறை என்றால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 3 மாதங்கள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன. சில சமயங்களில் இந்த 2 தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படலாம்.
அதுவே 2வது முறை சிக்கினால், 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2வது முறை சிக்கினாலும், சில சமயங்களில் இந்த 2 தண்டனைகளும் சேர்த்தே விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு இந்த இ-டிடெக்ஸன் சிஸ்டமே அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீதை அனுப்பி வைத்து விடும். அதிரடியான இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, ஒடிசா மாநிலத்தில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள 22 டோல்கேட்களில், இன்று (பிப்ரவரி 1) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களால் நிகழும் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் தொடர்ச்சியாக சிக்கல்கள் ஏற்பட்டு வரும் காரணத்தால்தான், இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஏனெனில் அபராதம் செலுத்துவதற்கு பதில், இன்சூரன்ஸை புதுப்பித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வாகன உரிமையாளர்கள் வந்து விடுவார்கள். இது சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யும்.
ஆனால் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சில திட்டங்களில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டுள்ளோம். எனவே இது போன்ற நல்ல திட்டங்களை குளறுபடிகள் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
இதற்கிடையே ஒடிசாவை சேர்ந்த வாகன உரிமையாளர்கள் சிலர், டோல்கேட்களில் ஏற்கனவே கட்டணம் அதிகம். அப்படி இருக்கும்போது இந்த திட்டத்தை வேறு அமலுக்கு கொண்டு வந்துள்ளார்களா? என புலம்புவதை கேட்க முடிகிறது. ஆனால் இப்படி வீணாக புலம்புவதற்கு பதில், இன்சூரன்ஸை புதுப்பித்து கொள்வது நல்லது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
குறிப்பு: இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








