மெட்ரோ ரயில் நிலையங்களை கலக்க வரும் வாடகை ஸ்கூட்டர் திட்டம்: வாடகை தொகை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
மெட்ரோ ரயில் பயணிகளைக் கவரும் விதமாக வோகோ ஆட்டோ மோட்டிவ் நிறுவனமும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.

நாளுக்க நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் அதன் காரணமாக உயர்ந்து வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசலை சென்னை மாநகரம் சந்தித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. திருமங்கலம் - விமான நிலையம், சைதாப்பேட்டை- சென்ட்ரல் வரை சுரங்கப் பாதையிலும், கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை மேம்பால பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயனாளிகளின் வசிதியை மேலும் மேம்படுத்தும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், வோகோ ஆட்டோ மோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வோகோ ஆட்டோ மோட்டிவ் நிறுவனம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து மின்சார இரு சக்கர வாகனத்தை வாடகை விடும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சென்னை அண்ணாநகர் டவர், வடபழனி, கிண்டி, ஆலந்தூர் ஆகிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு வழங்க உள்ளது.
முதல்கட்டமாக இத்திட்டம் மேற்கூரிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வோகோ ஆட்டோ மோடிவ் நிறுவனத்தின் இந்த திட்டத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களது செல்போனில் வோகோ ஆப்பை டவுண்லோட் செய்ய வேண்டும்.

பின்னர், அந்த ஆப்பில் உங்களது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட சில தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து, உங்களது மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும் இதைப்பயன்படுத்தி, நீங்கள் மின்சார ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.
இந்த ஸ்கூட்டருக்கு வாடகையாக நிமிடம் ஒன்றிற்கு ரூ. 1.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றுவிட்டு பின்னர் ஸ்கூட்டரை ஒப்படைக்க வரும்போது மொத்த தொகையைக் கணக்கிட்டு செலுத்தலாம்.

சோதனையின் அடிப்படையில் நடத்தப்படும் இத்திட்டம் வெற்றியடையுமேனால், மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படும் என வோகோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சேவையை பயன்படுத்த எண்ணுபவர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் வந்து இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வோகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, வாடகை மிதிவண்டி, வாடகை கார், வாடகை ஆட்டோ உள்ளிட்ட சில சேவைகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகமும், வோகோவும் இணைந்து வாடகை மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









