E20 பெட்ரோல் தரம் குறித்து கவலை... மாருதி, டாடா, மஹிந்திரா கடிதங்களில் வெளியான தகவல்கள்!
மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் பொதுவெளியில் E20 பெட்ரோலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த மூன்று நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் E20 பெட்ரோலின் தரத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து கவலையை பகிர்ந்து கொண்டது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விசாரணை மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கடந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இருந்து E20 பெட்ரோல் மாதிரிகளை எடுத்து மாருதி, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சோதனை நடத்தி உள்ளனர். இதில், குளோரைடு அளவும், ஈரப்பதமும் அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, அரசு விதிகளின்படி E20 பெட்ரோலில் அதிகபட்சமாக 3ppm என்ற அளவில் இருக்க வேண்டிய குளோரைடு அளவு தமிழ்நாட்டில் உள்ள 27 பெட்ரோல் நிலையங்களில் எடுக்கப்பட்ட E20 பெட்ரோல் மாதிரிகளில் 1.3 முதல் 24ppm என்ற அளவுக்கு இருந்துள்ளது. கர்நாடகாவில் 1 முதல் 2.2ppm என்ற அளவில் இருந்துள்ளது. ஆனால், ராஜஸ்தானில் 6 முதல் 570 வரையிலும், டெல்லியில் 1.4 முதல் 420 என்ற அளவிலும் இருந்தது கண்டறியப்பட்டதாக மேற்கண்ட மூன்று நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் மின்னஞ்சல் பரிமாற்றங்களில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, அரசு விதிகளின்படி 3000ppm என்ற அளவில் இருக்கவேண்டிய ஈரப்பதம் அளவானது, ஆந்திராவில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 13,000ppm வரையிலும், உத்தரப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் அதிகபட்சமாக 12,500ppm வரை இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
E20 பெட்ரோலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாருதி உள்ளிட்ட நிறுவனங்கள் வெளிப்படையாகவே தெரிவித்த நிலையில், தனிப்பட்ட முறையில் அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் E20 தரத்தின் குறைபாடுகள் குறித்த கவலையை வெளிப்படுத்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒருபுறம் E20 பெட்ரோல் மூலமாக எந்த பிரச்னையும் இல்லை என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் கூறி வரும் நிலையில், இந்த சோதனை குறித்த இமெயில் பரிமாற்றங்கள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அண்மையில் இதே காரணங்களை வைத்து இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (SIAM) மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது மீடியாக்கள் மூலமாக அம்பலமானது. ஆனால், இந்த தரக் குறைபாடு குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அதிக ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக தேவைப்படுவதாக கூறி சியாம் கடிதத்தை வாபஸ் வாங்கியது. அத்துடன், E20 பெட்ரோலுக்கு தனது முழு ஆதரவையும் அளிப்பதாக கூறியது.
எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோலானது வாகனங்களின் எஞ்சின் பாகங்களில் பாதிப்பையும், செயல் இழப்பையும் ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், மைலேஜ் குறைகிறது என்றும் வாகனங்களுக்கு அதிக பராமரிப்பு செலவீனம் ஏற்படுவதாகவும் புகார் கூறி வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால், E20 பெட்ரோல் காரணமாக பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட E20 பெட்ரோல் மாதிரிகளில் குளோரைடு அளவும், ஈரப்பதமும் நிர்ணயிக்கப்பட்டதைவிட மிக அதிக அளவு இருப்பதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. E20 பெட்ரோல் தரமானதாக இருந்தாலும், அதனை எடுத்துச் செல்லும் போக்குவரத்து முறைகள், பெட்ரோல் நிலையங்களில் இருப்பு வைக்கும் கலன்களிலும் பிரச்னை இருந்தால் வாகன எஞ்சின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே, அரசு இந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Source: Reuters


Click it and Unblock the Notifications