E20 ஜனதா பார்ட்டிக்கு பெருகும் ஆதரவு... E20 உடன் 100% பெட்ரோலும் விற்க வேண்டும் என புதிய கோரிக்கை!
இந்தியாவில் E20 (20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்) தற்போது நாடு முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பது போன்ற நோக்கங்களுடன் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், E20 பயன்பாடு குறித்து வாகன ஓட்டிகள் மத்தியிலிருந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
எக்ஸ் தளத்தில் பிரச்சாரம்
இந்த நிலையில், E20 பெட்ரோலுக்கு எதிராக டெல்லி டாக்ஸி சங்கம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி அறிவித்ததைத் தொடர்ந்து, தற்போது "E20 Janta Party" என்ற பெயரில் எக்ஸ் (X) தளத்தில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்களில் வேகமாக ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய கோரிக்கை
இந்த பக்கத்தில், "E20 பெட்ரோலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரவில்லை; அதற்கு பதிலாக, E20 உடன் சேர்த்து எத்தனால் கலப்பு இல்லாத 100 சதவீத பெட்ரோலையும் விற்பனை செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோலே கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால், E20-க்கு இணக்கமாக வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக இந்த எத்தனால் கலப்பு உள்ள பெட்ரோலை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து தங்களது பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர்.
வாகன உரிமையாளர்களின் கவலை
குறிப்பாக, 2023 ஏப்ரலுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட சில வாகனங்களில் E20 பயன்படுத்துவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். E20 பயன்படுத்துவதால் மைலேஜ் குறையும், நீண்ட கால பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் இருக்கிறது.
மத்திய அரசு விளக்கம்
இருப்பினும், E20 விற்பனை குறித்த தங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. E20 பயன்பாட்டால் வாகனங்களுக்கு பரவலான தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டதாக எந்த ஆதாரப்பூர்வமான புகார்கள் வரவில்லை என்றும், பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகே E20 நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
எத்தனால் கலப்பை அதிகரிப்பதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதுடன், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு கூடுதல் தேவை உருவாகும் என்றும், அதனால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. மேலும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை ஓரளவு குறைத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும் என்பது அரசின் கொள்கை முடிவாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
E20 குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அதிகரித்து வந்தாலும்,E20 பெட்ரோலை விற்பனையில் நிறுத்துவது என்பது கோரிக்கையாக இல்லை. தற்போது உள்ள E20 உடன் சேர்த்து 100 சதவீத சாதாரண வகை பெட்ரோலையும் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய கோரிக்கையாக மாறி இருக்கிறது. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications