E20 பெட்ரோலை தொடர்ந்து பயோ சிஎன்ஜி திட்டத்தை கையிலெடுத்த மத்திய அரசு... 23,000 கோடி ஒதுக்கீடு!!
இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த மத்திய அரசு, அடுத்ததாக பயோ சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக, கோபர்தன் (Galvanizing Organic Bio-Agro Resources Dhan) எனப்படும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், வாகன எரிபொருள் பயன்பாட்டிலும் பெரிய அளவிலான மாற்று எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டத்திற்காக ரூ.23,731 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிராமப்புறங்களில் கிடைக்கும் கழிவுகளை எரிபொருளாக மாற்றும் முயற்சியை இது ஊக்கப்படுத்தும் என்று தெரிகிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் வரும் 2035-36 நிதி ஆண்டு காலம் வரையில் இந்த நிதி ஒதுக்கீடு மூலமாக கோபர்தன் திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்யும் நடைமுறையாக இருக்கும். சாதாரண பயோ கேஸில் பொதுவாக 55% முதல் 65% வரை மீத்தேன் மற்றும் 35% முதல் 44% கார்பன் டை ஆக்சைடு இருக்கும். இதனை சில சுத்திகரிப்பு நடைமுறை மூலமாக கார்பன் டை ஆக்சைடு நீக்கப்படும். பின்னர் அழுத்தம் கூட்டப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தி செய்யப்படும். இதன்மூலமாக மீத்தேன் அளவு 98% வரை அதிகரிக்கப்பட்டு பின்னர் அழுத்தப்பட்ட வாயுமாக மாற்றினால், அது சிஎன்ஜி எரிபொருளுக்கு இணையானதாக இருக்கும்.
இதன்மூலமாக சாதாரண சிஎன்ஜி எரிபொருளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிபொருளாக Bio-CNG இருக்கும். இது மாட்டுச்சாணம், விவசாயக் கழிவுகள், கரும்பு ஆலை கழிவுகள், உணவுக் கழிவுகள் மற்றும் நகராட்சி உயிரியல் கழிவுகள் போன்றவற்றை அறிவியல் முறையில் சுத்திகரித்து இந்த எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். இந்த எரிபொருளை வாகன எஞ்சின்களில் பெரிய மாறுதல்கள் இல்லாமல் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட CBG எரிபொருளை CNG வாகனங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால், தற்போதுள்ள CNG வாகனங்களில் பெரிய மாற்றமின்றி இந்த புதிய எரிபொருளை பயன்படுத்த முடியும். தற்போதுள்ள CNG விநியோக அமைப்பில் படிப்படியாக CBG கலப்பை அதிகரிப்பதும் அரசின் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜி (LNG) மற்றும் பிற புதைபடிவ எரிபொருட்களின் மீதான சார்பை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், விவசாயக் கழிவுகளை எரிக்காமல் மதிப்புள்ள எரிபொருளாக மாற்றுவதன் மூலம் காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது.
மேலும், தற்போதுள்ள CNG விநியோக அமைப்பில் படிப்படியாக CBG எரிபொருளை கலப்பதும் அரசின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கான CBG Blending Obligation ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் CBG உற்பத்தியாளர்களுக்கு உறுதியான சந்தை உருவாகுவதுடன், இந்தத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளும் முதலீடுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக, கோபர்தன் பதிவு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான Bio-CNG மற்றும் பயோகேஸ் திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாட்டிலும் நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கோபர்தன் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
E20 திட்டம் பெட்ரோல் பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியதைப் போல, அடுத்த சில ஆண்டுகளில் Bio-CNG திட்டம் இந்தியாவின் CNG போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயக் கழிவுகள் மற்றும் பிற உயிரியல் கழிவுகளை பயனுள்ள வளமாக மாற்றுவதுடன், இயற்கை எரிவாயு மற்றும் பிற புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதி சார்பை குறைக்கவும், கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications