கொல நடுங்குது! ஓடி கொண்டிருந்தபோதே ரெண்டா பிளந்த பைக்! காரணம் தெரிஞ்சா இனிமேல் வண்டில ஏறவே பயப்படுவீங்க!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) விற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் அவற்றின் பாதுகாப்பு தொடர்பான அச்சம் வாடிக்கையாளர்களுக்கு இருந்து கொண்டேதான் உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மாஞ்செரியல் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சாலையில், இளைஞர் ஒருவர் எலெக்ட்ரிக் பைக் ஒன்றை ஓட்டி கொண்டு வந்தார். அப்போது அவரது பைக் திடீரென இரண்டாக உடைந்தது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு அருகே டெம்போ ஒன்று வந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக அவர் மீது டெம்போ ஏறவில்லை. கீழே விழுந்த உடனேயே, அந்த இளைஞர் எழுந்து விட்டார். ஆனால் ஓடி கொண்டிருந்தபோதே எலெக்ட்ரிக் பைக் இரண்டாக உடைந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இரண்டாக உடைந்தது, எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் உற்பத்தி குறைபாடுதான் இதற்கு காரணமாக இருக்கும் என கருதப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

உற்பத்தி பணிகளின்போது, சில சமயங்களில் பாகங்கள் சரியாக பொருத்தப்படுவதில்லை. வெல்டிங் வைப்பது போன்ற பணிகளிலும் சில சமயங்களில் பிரச்னைகள் ஏற்பட்டு விடுகின்றன. இப்படி குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்ட ஒரு வாகனத்தை தொடர்ச்சியாக ஓட்டும்போது, இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஈரப்பதம், வெப்பநிலை போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு காரணமாக உள்ளன.
உற்பத்தி குறைபாடுகள் ஒரு காரணம் என்றாலும், நாம் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் இத்தகைய அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். இதற்கு முதலில் நீங்கள் உங்கள் வாகனத்தை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம், வாகனத்தில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால், உங்களுக்கு தெரிந்து விடும்.
அதாவது வித்தியாசமான சத்தங்கள் வந்தாலோ, ஏதாவது வித்தியாசமாக தெரிந்தாலோ, வழக்கத்திற்கு மாறாக ஏதாவது இருந்தாலோ நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். எனவேதான் சீரான இடைவெளிகளில் வாகனத்தை அவ்வப்போது சோதனை செய்வது மிகவும் முக்கியம் என நாங்கள் கூறுகிறோம். எக்காரணத்தை கொண்டும் இதை செய்ய தவற வேண்டாம்.
அதேபோல் வாகனத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்க கூடாது. வேக தடைகளில் ஏற்றும்போது, நிதானமாக பயணம் செய்ய வேண்டும். மேலும் வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றுவதையும் அறவே தவிர்க்க வேண்டும். ஓவர்லோடு ஏற்றினால், உங்கள் வாகனத்தின் மைலேஜ் மற்றும் செயல்திறன் ஆகியவையும் பாதிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து, வாகனங்களை வாங்குகின்றனர். அதற்கு முறையான பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் உற்பத்தி குறைபாடு பிரச்னைகளால், வாடிக்கையாளர்கள் சில சமயங்களில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். தெலங்கானாவில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கூட இதற்கு ஒரு உதாரணம்தான்.
இதற்கு முன்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓடி கொண்டிருந்தபோதே இரண்டாக உடைந்த சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் உறுதி ஏற்க வேண்டும். அதையும் மீறி தவறு நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








