மதுரைக்கும் இந்த வாகனம் உண்டு.. கப்பல்ல போற மாதிரி பயணிக்கலாம்.. ஆகஸ்டு மாசத்துல பயன்பாட்டுக்கு வந்திரும்!
சென்னையின் பொதுபோக்குவரத்தில் விரைவிலேயே மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஆயிரக் கணக்கான பேருந்துகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு ஆர்டர் கொடுத்துவிட்டது. இதில் சில யூனிட்டுகளே ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிய தகவலாக சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையில் புதிதாக 32 டிஎன்எஸ்டிசி பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டில் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பச்சை கொடியசைத்து இணைத்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிடிஆர், பி மூர்த்தி உள்ளிட்ட பிற துறை அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். இந்த புதிய பேருந்துகள் இணைப்பு நிகழ்ச்சியின்போதே மதுரையிலும் விரைவில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பபட இருப்பதை பொதுபோக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் உறுதிப்படுத்தினார்.

வருகின்ற ஜூன் மாதத்தில் சென்னையிலும், இதற்கு பின்னர் மதுரையிலும் அவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்தார். இரண்டு மாத கால இடைவெளியில் மதுரையில் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். ஆகையால், வருகின்ற ஆகஸ்டு மாதத்தில் மதுரையின் முக்கிய பகுதிகளில் மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் பேருந்துகள் பொது போக்குவரத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 600 தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஆர்டரை அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தின் துணை பிராண்டான சுவிட்ச் மொபிலிட்டி (Switch Mobility)-யிடம் வழங்கியது. இதில், 500 யூனிட்டுகள் வழக்கமான தாழ்தள ஏசி வசதி அல்லாத எலெக்ட்ரிக் பேருந்துகள் ஆகும்.
100 யூனிட்டுகள் ஏசி வசதிக் கொண்ட தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் ஆகும். இவற்றிலேயே சில சென்னையிலும், மதுரையிலும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை மற்றும் மதுரை மட்டுமின்றி கோவை போன்ற பிற நகரங்களிலும் மின்சார பேருந்துகள் சேவையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன் வெளியாகிய தகவல்களின்படி, இஐவி12 (EiV 12) மாடலுக்கே மிகப் பெரிய எண்ணிக்கையில் ஆர்டர் கொடுத்திருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஓர் முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து தயாரிக்கப்பட்ட மின்சார பேருந்து ஆகும். டிசைன் மற்றும் தயாரிப்பு என அனைத்துமே இந்தியாவிலேயே வைத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
ஒரே நேரத்தில் 39-க்கும் அதிகமானோர் இந்த பேருந்தில் பயணிக்க முடியும். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளின் வீல் சேர்களைப் பார்க் செய்யும் வசதியும் இந்த பேருந்தில் உண்டு. இந்த பேருந்தை சார்ஜ் செய்வதற்கு இரண்டே மணி நேரங்கள் போதும். டூயல்-கன் சிசிஎஸ்2 (Dual-Gun CCS2) வகை சார்ஜிங் வசதியே இந்த பேருந்தில் வழங்கப்பட்டு உள்ளது.
எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 235 kW திறன் கொண்ட மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், ஓர் முழு சார்ஜில் 314 கிமீ தூரம் வரை இந்த பேருந்தில் பயணிக்க முடியும். இத்தகைய மின்சார பேருந்தையே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் தமிழக அரசு பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஓர் முயற்சியாக தமிழக அரசு உலக வங்கியின் நிதியுதவியின்கீழ் இந்த பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. ஏற்கனவே, தமிழக அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் முயற்சியையும் கையில் எடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. தமிழகத்தை காற்று மாசில்லா மாநிலமாக மாற்றும் ஓர் முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








