“எலக்ட்ரிக்கில் டிராக்டர்களையும், லாரிகளையும் நான் அறிமுகப்படுத்துவேன்” - அமைச்சர் நிதின் கட்கரி!!
இந்தியாவில் டிராக்டர்களும், லாரிகளும் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஃபேம் 2 திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியையும், விற்பனையையும் ஊக்கப்படுத்தும் விதமான மானியங்களை வழங்குவது இந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடே ஆகும்.

அத்துடன் மத்திய அரசின் இந்த முன்முயற்சி ஆனது மாநில அரசாங்கங்களையும் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமான மானியங்களை அறிவிக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் கடந்த ஜூன் 4ஆம் தேதி மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு படி மேல் சென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புனேவில் நடைபெற்ற சர்க்கரை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர், எலக்ட்ரிக் டிராக்டர்கள், லாரிகளின் அறிமுகத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மாற்று எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்கப்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "விரைவில் எலக்ட்ரிக் டிராக்டர்களையும், எலக்ட்ரிக் லாரிகளையும் நான் அறிமுகப்படுத்தவுள்ளேன்" என தெரிவித்தார். மேலும், எலக்ட்ரிக் வாகனங்களின் பிரபலம் பல மடக்கு அதிகரிக்கும் என கூறியவர், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மற்றும் ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களது எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலக்ட்ரிக் ரிக்ஷாக்கள் சாலைகளில் உலா வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், "தற்போதைய ரூ.6.5 லட்ச கோடியில் இருந்து 2025ஆம் ஆண்டிற்குள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வருவாய் ரூ.15 லட்ச கோடியாக அதிகரிக்கும்" எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "நாட்டின் முக்கியமான துறைகளுள் ஆட்டோமொபைலும் ஒன்று. இது 4.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் அரசாங்கத்திற்கு அதிகப்படியான சரக்கு & சேவை வரியை தருகிறது.

ஏற்றுமதியில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு அபரிதனமானது. பல நிறுவனங்கள் தங்களது வாகனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன" என்றார். அதுமட்டுமில்லாமல், ரஷ்ய அறிவியலாளர்களுடன் இணைந்து பெட்ரோல் & எத்தனாலின் கலோரி மதிப்பை சமப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளதாகவும், இது கேம்-சேஞ்சர் தொழிற்நுட்பமாக விளங்கும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய நிதின் கட்கரி, "பயோ சிஎன்ஜியில் கட்டுமான உபகரணங்கள், இயந்திரம் மற்றும் விவசாயத்திற்கான இயந்திரங்களை இயக்க முயற்சிக்கிறோம். ஜேசிபிகள் கூட 50% சிஎன்ஜி மற்றும் 50% டீசலின் மூலமாக இயங்குகின்றன. விவசாய இயந்திரங்களை நெகிழ்வு என்ஜின்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்க்கரை ஆலைகள் தொடர்பாக பேசிய நிதின் கட்கரி, சர்க்கரை ஆலைகள் துறையின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு எத்தனால் தயாரிப்பில் தீவிரம் காட்ட வேண்டும் என்றவர், சர்க்கரையின் விலையை சீராக வைத்திருக்க கரும்பு சாறை எத்தனால் மற்றும் சர்க்கரை பாகு-ஆக மாற்ற வேண்டும். இதன் மூலமாக சர்க்கரை உற்பத்தி குறையுமேயானால், எத்தனாலை சிறந்த விலையில் நிர்ணயிக்க முடியும்" என்றார்.

இந்தியாவில் இப்போதும் ஒரு சில மாநிலங்களில் எத்தனால் உருவாக்கப்படுகிறது. அத்தகைய மாநிலங்களில் இருந்து எத்தனாலை உற்பத்தி செய்யாத மாநிலங்களுக்கு எத்தனால் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கான ஏற்றுமதி & இறக்குமதி செலவை குறைக்கவும் மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புனேவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் என்சிபி தலைவர் சராத் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சராத் பவார், சர்க்கரை ஆலைகள் சர்க்கரை உற்பத்திக்கான செலவை குறைக்கும் என்றார். இந்த ஆலோசனை கூட்டம் வசந்த்டாடா சர்க்கரை நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் சமீபத்தில் அமைச்சர் நிதின் கட்கரி யூலு மிராக்கிள் என்ற பெயரிலான குறை-வேக எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பார்வையிட்டார். யூலு என்பது ஓர் மொபைல்போன் செயலி ஆகும். இதன் தயாரிப்பே மிராக்கிள். குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தனது வாகனங்களை ஒருங்கிணைக்கும் யூலு அவற்றை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








