எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளின் ஆயுட்காலம் பற்றி கவலைப்படாதீங்க... புதிய ஆய்வு முடிவுகள் கூறுவது இதைதான்!!
எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளுக்கு ஆயுட்காலம் எவ்வளவு? இதுகுறித்து நாம் கவலைப்படும் அளவிற்கு பிரச்சனைகள் உள்ளனவா? என்பது போன்றதான வினாக்களுக்கு விடையாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நமது நாடு முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என கூறப்படுவதாலும், எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் நமது மத்திய அரசு முனைப்புடன் செயல்படுவதினாலும், கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது.

தற்போதைக்கு, எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள ஒரே குறை என்னவென்றால், போதிய ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நம் நாட்டில் இல்லாதது. இதற்காக ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் பல்வேறு நிறுவனங்களால் நிறுவப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த மக்கள் சிறிது தயக்கம் காட்டுவதற்கு மற்றொரு காரணம், எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து இணையத்திலும், பொது வெளியிலும் உலாவரும் வதந்திகள் ஆகும்.
குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை குறிப்பிட்ட வருடத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும், அதன்பின் அவற்றை மாற்றுவதற்கு அதிக செலவாகும் என்ற வதந்தி எலக்ட்ரிக் வாகனங்களை முதல்முறையாக வாங்க இருந்த மக்கள் பலரின் திட்டங்களை மாற்றியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 15,000 எலக்ட்ரிக் கார்கள் உட்படுத்தப்பட்டன.

இந்த எலக்ட்ரிக் கார்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் விற்பனையில் உள்ள டெஸ்லா, ஹூண்டாய், ஜாகுவார், ஆடி மற்றும் நிஸானின் எலக்ட்ரிக் கார்களாகும். எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளின் தரம் மற்றும் ஆயுட்காலம் குறித்து நாம் மிகவும் கவலையுறுவதாகவும், அந்த அளவிற்கு கவலைப்பட தேவையில்லை என்பதும் இந்த ஆய்வு முடிவுகளின்படி தெரியவந்துள்ளது.
தற்போதைய எலக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம்-இரும்பு பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. இதே லித்தியம்-இரும்பு பேட்டரிகள் தான் அளவில் சிறியதாக நாம் பயன்படுத்தும் மொபைல் போன்களிலும் பொருத்தப்படுகின்றன. மொபைல் போனின் பேட்டரியை புதியதில் பயன்படுத்த சிறப்பானதாக இருக்கும், சார்ஜ் குறைவதும் மெதுவாக நடக்கும். ஆனால் மொபைல் போன் பழையது ஆக, ஆக பேட்டரியின் சார்ஜிங் திறன் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும், நீண்ட நேரம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

எலக்ட்ரிக் வாகனங்களிலும் கிட்டத்தட்ட இதுபோன்றே நடக்கும். ஏனெனில் லித்தியம்-இரும்பின் வேதியல் பண்பு இது. இருப்பினும் எரிபொருள் என்ஜின் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனம் எவ்வளவு காலத்திற்கு இயங்கும் என்பது குறித்து பெரியதாக கவலைப்பட தேவையில்லை என தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், பேட்டரியின் ஆயுட்காலம் அதனை தயாரிக்கும் நிறுவனத்தை பொறுத்தது எனவும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
இந்த உலகில் உள்ள எந்தவொரு பொருளுக்கும் ஆயுட்காலம் என்பது உள்ளது. இருந்தாலும், நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளை தயாரித்து வழங்குவது உற்பத்தி நிறுவனங்களின் கடமை ஆகும். பெட்ரோல் & டீசல் கார்கள் 15 வருடங்கள் பழமையாகி விட்டால், அவற்றை அழிக்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. பெரும்பான்மையான நாடுகளில் இவ்வாறான கட்டுப்பாடுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








