இன்னும் 2 வருஷத்துக்கு அப்புறம் பாருங்க... அந்த மேஜிக் நடக்கும்... மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை...
இன்னும் 2 வருடங்களில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டோகார் இந்தியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அப்போது குறுகிய காலத்திற்குள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறியதற்காக, இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் துறைக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் விஷயத்தில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இதற்காக ஆட்டோமொபைல் துறை வழங்கிய கடின உழைப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகள் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போதைய கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சுத்தமான காற்றின் மீது இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்த பெரிய பிரச்னையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரச்னை காரணமாக பொருளாதார ரீதியாக நாம் பின்தள்ளப்படுகிறோம். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து கொண்டே வருவது இன்னும் பெரிய பிரச்னையாக உள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னைக்கு எதிராக போரிட்டு வருவதை நாம் பார்க்கிறோம்'' என்றார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய இரண்டு பெரிய பிரச்னைகளையும் குறைக்க வேண்டும் என்பதற்காகதான் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

குறிப்பாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் அவசியம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார். ஆனால் லித்தியம் அயான் பேட்டரியின் அதிகப்படியான விலை காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பது பெரும் தடையாக உள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம் என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த சூழலில், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக வரும் என எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்த விஷயத்தில் சில பிரச்னைகள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் தற்போது ஆட்டோமொபைல் தொழில்துறை இயங்கி வரும் விதம், இந்த இலக்கை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்துகிறது'' என்றார். விலை குறையும்பட்சத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் தயங்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








