ராயல் என்பீல்டை என்னுடன் ஒப்பிட்டா கிண்டல் பண்றீங்க? பஜாஜ் பைக்கை ஆவேசமாக தாக்கிய யானை!
வனப்பகுதி சாலையில் சென்ற பஜாஜ் டிஸ்கவர், டொயோட்டா வேன், டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஸா உள்ளிட்ட வாகனங்களை யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியது.
வனப்பகுதி சாலையில் சென்ற பஜாஜ் டிஸ்கவர், டொயோட்டா வேன், டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஸா உள்ளிட்ட வாகனங்களை யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியது. அதிர்ச்சியளிக்கும் அந்த வீடியோ குறித்தும், வன விலங்குகளிடம் இருந்து வாகன ஓட்டிகள் எப்படி தப்புவது? என்பது குறித்தும் பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மிக வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக வனப்பகுதிகளின் நடுவிலும் சாலை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல வனப்பகுதிகளின் நடுவே சாலைகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனிடையே இலங்கை வனப்பகுதியில் செல்லும் வாகனங்களை தாக்க முயலும் யானையின் வீடியோ வெளியாகியுள்ளது. வனப்பகுதியை ஒட்டிய சாலையில் யானை தென்பட்டதால் நிறுத்தப்பட்ட ஒரு காரில் இருந்து அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, சாலையில் செல்லும் வாகனங்களை உற்று நோக்கி கொண்டிருந்தது. சில நிமிடங்கள் பொறுமையாக இருந்த அந்த யானை, பின்னர் ஆத்திரத்தில் வாகனங்களை தாக்க முயன்றது.

சாலைக்கு ஓடி சென்று, சில டூவீலர் ஓட்டிகளையும் யானை தாக்க முயற்சி செய்தது. இதில், பஜாஜ் டிஸ்கவர் ஒன்றும் அடக்கம். ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனம் டோமினார் 400 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இதற்கென பஜாஜ் நிறுவனம் செய்த விளம்பரங்களில் ராயல் என்பீல்டு பைக்குகளை கிண்டல் செய்திருந்தது. அதாவது ராயல் என்பீல்டு பைக்குகளை யானை போல் சித்தரித்து, பஜாஜ் நிறுவனம் கிண்டல் அடித்தது. அந்த கோபத்தில்தான் பஜாஜ் டிஸ்கவரை யானை தாக்க முயன்றதோ என்னவோ!!!

இதனிடையே முழுமையாக சாலைக்கு வந்த அந்த யானை மேலும் சில வாகனங்களை தாக்க முயன்றது. அப்போது பஸ் ஒன்று அவ்வழியாக வந்தது. யானையை மறித்து நிறுத்திய அந்த பஸ்ஸின் டிரைவர், வீடியோ எடுத்து கொண்டிருந்த கார், அந்த பகுதியை கடந்து செல்ல உதவினார்.

ஆனால் அந்த காரில் இருந்தவர்கள் செல்லவில்லை. வீடியோ எடுப்பதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனிடையே அவ்வழியாக டொயோட்டா வேனில் வந்த சிலர் யானைக்கு உணவு அளித்தனர். அதனை யானை உடனடியாக எடுத்து சாப்பிட்டு விட்டது.

பின்னர் டிவிஎஸ் ஆட்டோ ரிக்ஸா ஒன்றையும் யானை தாக்க முயன்றது. யானை தாக்க முயன்ற பல வாகன ஓட்டிகள், குறிப்பாக டூவீலர் ஓட்டிகள் சிலர் நூலிழையில்தான் தப்பினர். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்.

அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்திய சாலைகளிலும் வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டி விரட்டி தாக்கிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மேற்கண்ட வீடியோவில் நீங்கள் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், யானைக்கு மிக நெருக்கமாக சென்றனர். இது மிகவும் அபாயகரமானது.

வனப்பகுதி சாலைகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தென்பட்டால், வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்கள் சில விஷயங்களை பின்பற்றுவது அவசியம். முதலில் வன விலங்குகளுக்கு மரியாதை கொடுங்கள்.

ஏனெனில் வன விலங்குகள் உங்கள் இடத்திற்கு வரவில்லை. நீங்கள்தான் வன விலங்குகளின் இடத்திற்கு சென்றுள்ளீர்கள். எனவே வன விலங்குகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் முதலில் மிக மிக அவசியமானது.

ஒருவேளை வன விலங்குகளால் சாலை பிளாக் ஆகி விட்டால், வன விலங்கு நிற்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி, உங்கள் வாகனம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சாலை க்ளியர் ஆகும் வரை பொறுமையாக காத்திருங்கள்.

ஹார்ன் எழுப்பி, வன விலங்குகளை கோபத்திற்கு உள்ளாக்க வேண்டாம். எவ்வித சப்தமும் எழுப்பாமல் இருப்பதுதான் நல்லது. அதேபோல் 'சடன் மூவ்மெண்ட்டும்' செய்ய வேண்டாம்.

அதேபோல் வன விலங்குகளுக்கு உணவும் அளிக்காதீர்கள். பயணிகளிடம் இருந்து தனக்கு விருப்பமான உணவு எளிதாக கிடைக்காவிட்டால், ஆத்திரம் அடையும் சுபாவம் வன விலங்குகளுக்கு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications