யம்மோவ்... ‘குட்டி யானை’ வண்டியில் பெரிய யானை!! கொஞ்ச நேரத்தில் மிரண்டுப்போன மற்ற வாகன ஓட்டிகள்!
யாராலும் எளிதில் நம்ப முடியாத வகையில் அளவில் பெரிய யானை ஒன்று டாடா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆச்சிரியத்தையும், அதேநேரம் பயங்கரமானதாகவும் விளங்கும் இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகளவில் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படக்கூடிய நாடுகள் என்று பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு இந்திய சாலைகள் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாலைகளின் ஓரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் சில சமயங்களில் அபாயகரமானதாக விளங்குகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு குடிப்போதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது என பல காரணங்கள் இருந்தாலும், சாலைகளில் எவ்வாறு, எத்தகைய நிலையில் வாகனம் ஓட்டுவது என்கிற விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்பதே மற்ற கவனக்குறைவுகளுக்கு அடித்தளமாக அமைகிறது. இதற்கு உதாரணமாக பல்வேறு சம்பவங்களை இதற்கு முன்னர் நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வகையில் ஒன்றாக, வாகனங்கள் மிகுந்த சாலையில் அளவில் சிறிய கமர்ஷியல் வாகனமான டாடா ஏஸ்-இல் அளவில் பெரிய யானை கொண்டு செல்லப்பட்டுள்ளது. பார்ப்போரையும், அந்த சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளையும் பயமுறுத்தும் விதமாக அமைந்த இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இந்த வீடியோ ஆனது யானையை கொண்டு சென்ற டாடா ஏஸ் வாகனத்திற்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் காட்சிப்படுத்தி வெளியிட்டதாகும். இந்த சம்பவத்தில், பெரிய தோற்றம் கொண்ட அந்த யானை நேரடியாக டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து செல்லப்படவில்லை. மாறாக, சிறிய டிரைலர் வண்டியில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டுள்ளது.

டாடா ஏஸ் வாகனத்தின் பின்னால் இந்த டிரைலர் வண்டி இணைக்கப்பட்டிருக்க, இந்த வண்டியில் இருந்து கயிறு மூலம் யானையின் கால்கள் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, அதே சிறிய டிரைலர் வாகனத்தில் யானையுடன் கூடவே யானை பாகனும் செல்கிறார். என்ன தான், யானையின் கால்கள் கட்டப்பட்டு இருந்து, யானை பாகன் கூடவே சென்றாலும் பொது சாலைகளில் இவ்வாறு அபாயகரமாக அளவில் பெரிய விலங்குகளை இடமாற்றம் செய்வது தவறாகும்.

ஏனெனில் இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு பயத்தையும், பதற்றதையும் வரவழைக்கக்கூடும். ஒரு சில வாகன ஓட்டிகள் யானையை பார்த்துக்கொண்டே முன்னால் இருக்கும் வாகனங்களையும், பாதசாரிகளையும் கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தலாம். அதுமட்டுமில்லாமல், யானையின் குணமும் எல்லா நேரங்களிலும் சாந்தமாகவே இருக்கும் என்று உறுதியாக கூறிவிட முடியாது.

வாகனத்தின் வேகத்தை பார்த்தோ அல்லது மற்ற வாகனங்களை பார்த்தோ அல்லது சாலையில் நாய்கள் குறைப்பதை பார்த்தோ பயந்து யானை ஏதேனும் செய்ய நேர்ந்தால் கண்ணிமைப்பதற்குள் பெரும் விபத்து நடந்து முடிந்துவிடும். அதற்கேற்ப யானையை சுமந்து செல்லும் டிரைலர் வண்டியின் அளவும் சிறியதாக உள்ளது. அதிலேயே ஒருபக்கம் யானை பாகன் வேறு நின்று கொண்டு சென்றுள்ளார்.

யானை அசவுகரியமாக உணர்ந்து கோபமடைந்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் அதுவும் உயிர் தானே. அதற்கும் வலி, பயம், மிரட்சி உள்ளிட்ட உணர்வுகள் ஏற்பட செய்யும் தானே... இந்த சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது, ஆனால் இந்தியாவில் எந்த பகுதி என்பது உறுதியாக தெரியவில்லை. யானை கொண்டு செல்லும் வாகனத்திற்கு அருகில் மெட்ரோ ரெயிலுக்கான பில்லர்கள் எழுப்பப்பட்டு வருவதால், இந்த சம்பவம் பரபரப்பான மெட்ரோ நகரத்தில் தான் அரங்கேறியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தில், டாடா ஏஸ் வாகனத்தின் செயல்படுதிறனை பாராட்டியே ஆக வேண்டும். சும்மாவா சொன்னார்கள், டாடா ஏஸ் வாகனத்தை ‘குட்டி யானை' என்று. டாடா மோட்டார்ஸின் இந்த தயாரிப்பு வாகனத்தில் அதிகப்பட்சமாக 750 கிலோ வரையிலான எடையில் பொருட்களை கொண்டு செல்லலாம். ஆனால் வீடியோவில் காட்டப்படும் யானை ஏறக்குறைய 5 ஆயிரம் கிலோ வரையில் எடை கொண்டதாக இருக்கும். அதனாலேயே தனியான டிரைலர் வண்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications