இதனாலதான் இவரு டாப் பணக்காரரா இருக்காரு போல!! கஸ்டமரின் கேள்விக்கு வெறும் 3 நிமிடங்களில் பதிலளித்த எலான் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டுவிட்டரில் எப்போதும் செயல்பாட்டில் இருப்பவர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். தனது எலக்ட்ரிக் கார்களின் வாடிக்கையாளர்கள், எலக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் உள்பட மற்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் விரைவாகவே பதிலளிக்கக்கூடியவர்.

அதேநேரம் இணையத்தில் வைரலாகும் விஷயங்களுக்கும் எலான் மஸ்க் தனது கருத்தை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, உலகின் பெரும் பணக்காரராக தற்சமயம் விளங்கும் இவரது டுவிட்டர் கணக்கு டெஸ்லாவின் சொந்த நிறுவன தொடர்பு துறையாகவும் செயல்படுகிறது. இந்த வகையில் சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவரது கேள்விக்கு எலான் அளித்த பதில், மீண்டும் அவரது விரைவான மற்றும் சரியான பதிலளிக்கும் தன்மைக்கு உதாரணமாக மாறியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த இந்த டெஸ்லா மாடல் 3 கார் உரிமையாளர், தனது எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காரின் அமைப்புடன் தனது ஐபோனை இணைக்க முடியவில்லை எனவும், இது தற்போது உலகளவிலான பிரச்சனையாக உள்ளது எனவும் எலான் மஸ்க்கை குறிப்பிட்டு டுவிட்டரில் வினா எழுப்பியுள்ளார். இதற்கு வெறும் 3 நிமிடங்களில் பதில் அனுப்பியுள்ள எலான் மஸ்க் முதலாவதாக, "சரிபார்க்கப்படுகிறது..." என கூறினார்.

அடுத்த 5 நிமிடங்களில் இந்த புகார் குறித்த அப்டேட் வந்தார். இரண்டாவது பதில் பதிவில் சர்வர் பிரச்சனையில் இருப்பதாக கூறி, டெஸ்லா அப்ளிகேஷனில் அந்த சமயத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனையையும் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த தென் கொரிய வாடிக்கையாளர் மிகவும் நெகிழ்ந்துபோய், "நன்றி, எலான்" என பதிலளித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த செயல்பாடுகள் நெட்டிசன்கள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதற்கு அவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர். உண்மையில், கடந்த நவ.19ஆம் தேதி பல நாடுகளில் டெஸ்லா கார்களில் மென்பொருள் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான டெஸ்லா எலக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்கள் தங்களது காரை அதற்கென்றே பிரத்யேகமாக டெஸ்லா வழங்கியுள்ள செயலி உடன் இணைக்க முடியாமல் போனது.

இதில் சில உரிமையாளர்கள் டுவிட்டரில் எலான் மஸ்க் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதை அறிந்து டுவிட்டரில் அவரை கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதில் சில கேள்விகளுக்கும் எலானும் பதிலளித்தார். அதில் வைரலாகியுள்ள கலந்துரையாடல்களில் ஒன்று தான் மேலே உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு எந்தவித தயக்கமுமின்றி எலான் மஸ்க் மன்னிப்பு கோருகிறார்.

திருப்திக்கரமான வாடிக்கையாளர்கள் சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பில் டெஸ்லா உலகளவில் முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் வாடிக்கையாளர்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பதில் டெஸ்லா எல்லா நேரங்களிலும் ஆர்வம் காட்டுகிறது. ஓட்டுனரில்லா இயங்கும் வாகனங்கள் விஷயத்தில் தான் டெஸ்லா சற்று சறுக்கல்களை சந்திந்தது.

இதுகுறித்த மீம்களையும், வீடியோக்களையும் உங்களில் பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் ஆளில்லா இயங்கும் வாகனங்களை நோக்கிய காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இப்போது நகைச்சுவையாக இருக்கும் இந்த விஷயம் நாளை அன்றாட பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமே.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் டெஸ்லா நிறுவனத்தின் மொத்த சந்தை சொத்து மதிப்பு குறித்த லேட்டஸ்ட் விபரங்கள் வெளியாகி இருந்தன. இந்த விபரங்களின்படி, இந்தியாவில் இன்னமும் கால்பதிக்காத டெஸ்லாவின் மொத்த சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் (1000 கோடி)-ஐ கடந்துள்ளது. அமெரிக்க வாடகை கார் நிறுவனமான ஹெர்ட்ஸ் டெஸ்லாவிடம் இருந்து சமீபத்தில் 1 லட்ச எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து டெஸ்லாவின் சொத்து மதிப்பு 1 ட்ரில்லியனை கடந்துள்ளது.

டெஸ்லா மற்றும் ஹெர்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களில் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 1 லட்ச கார்கள் அனைத்துமே மாடல் 3 எலக்ட்ரிக் செடான் மாடலாகும். மேலே, தனது மாடல் 3 காருடன் தனது ஐபோனை இணைக்க முடியவில்லை என்று தான் தென்கொரிய வாடிக்கையாளர் புகார் தெரிவித்ததாக கூறியிருந்தோம் என்பது நினைவுக்கூரத்தக்கது.

அமெரிக்க சந்தையில் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் விலை 40 ஆயிரம் டாலர்களாக உள்ளது. டெஸ்லாவின் சொத்து மதிப்பு 1 ட்ரில்லியனை கடந்திருப்பது டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கியுள்ளவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த புதிய ஒப்பந்தத்தின் விளைவாக டெஸ்லாவின் பங்கு விலைகள் 13% அதிகரித்து, தற்சமயம் 1,024.86 டாலர்களாக உள்ளது.


Click it and Unblock the Notifications








