வரியாக மட்டும் 11 பில்லியன் டாலர்களை செலுத்தும் எலான் மஸ்க்!! இந்த ஆண்டிற்கான சிறந்த நபராக தேர்ந்தெடுப்பு!
இந்த 2021ஆம் வருடத்தில் மட்டும் 11 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையினை வரியாக செலுத்தி வருவதாக டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் எலான் மஸ்க் என்பது உங்களில் பெரும்பாலானோர்க்கு தெரிந்த விஷயமே. சமூக வலைத்தள பக்கங்களில் பெரும்பாலும் ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய எலானின் ட்விட்டர் பதிவுகள் பலமுறை ட்ரெண்டாகி உள்ளன. அதேநேரம் சிலமுறை சர்ச்சைக்குரியவைகளாக இருந்துள்ளன. இருந்தாலும் எலானை பின் தொடருபவர்கள் ஏராளம்.

இதனாலேயே எலான் மஸ்க்கின் சுவாரஸ்யமான கருத்துகளுக்காக அவரது ரசிகர்கள் காத்திருப்பர். மேலும், இவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பினும், தனது ரசிகர்களின் கருத்துகளுக்கும் எலான் மதிப்பு கொடுக்கக்கூடியவர். இதை ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், சில வாரங்களுக்கு முன்பு டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தில் தனது 10% பங்குகளை விற்கலாமா அல்லது வேண்டாமா என டுவிட்டரில் கேட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் அளிக்க வேண்டிய பதில்களையும் எலான் வழங்கி இருந்தார். அவற்றில் ஒன்றை அவர்கள் க்ளிக் செய்தனர். இதில் பெரும்பான்மையானவர்கள் விற்கலாம் என பதில் அளித்ததை தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை எலான் கடந்த நவம்பர் மாதத்தில் அடுக்கடுக்காக விற்க ஆரம்பித்தார்.

இதனை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சிக்கர விஷயமாக, தனது அனைத்து பணிகளையும் விட்டு விலக உள்ளதாகவும், முழுநேர இன்ஃப்ளூயன்சராகி விடலாமா என யோசித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது, இந்த 2021ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 11 பில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டாலர்களை வரியாக செலுத்தி வருவதாக எலான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், "ஆச்சிரியப்படுபவர்களுக்கு, இந்த ஆண்டு நான் 11 பில்லியன் டாலர்களுக்கு மேல் வரி செலுத்தவுள்ளேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் எலான் மஸ்க் கிட்டத்தட்ட 12.9 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். இவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 14 பில்லியன் டாலர்களை தாண்டுகிறது.

இருப்பினும் இப்போது, அமெரிக்க சட்டத்தின்படி, அவர் அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். மஸ்க் தனது வாக்குறுதியளிக்கப்பட்ட 10% இலக்கை அடைய மேலும் 4.1 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்க வேண்டும். இந்த ஆண்டு டெஸ்லாவின் சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்த பின்னர், ஃபோர்டு மோட்டார் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவற்றை காட்டிலும் அதிக மதிப்புமிக்கதாக மாறியது.

இதற்கு பிறகே எலான் மஸ்க் தனது பங்குகளை விற்க ஆரம்பித்தார். எலான் மஸ்க் வரி செலுத்த வேண்டும் என்றும், மற்ற அனைவரும் ப்ரீலோட் செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க ஜனநாயக கட்சியின் செனட்டர் எலிசபெத் வாரன் ட்விட்டரில் கூறிய ஒரு வாரத்திற்கு பிறகு, 11 பில்லியன் டாலர்களை வரியாக செலுத்துவதை இலக்காக கொண்ட மஸ்க்கின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் டெஸ்லா சிஇஓ-விற்கு "இந்த வருடத்தின் சிறந்த நபர்" என்ற சிறப்பினை அமெரிக்க ஆங்கில நாளிதழ் ஒன்று வழங்கியிருந்தது. இதற்கு முந்தைய ஒரு பதிவில், தான் டெஸ்லா நிறுவனத்தில் இன்னும் சில வருடங்களுக்கு தலைமை பொறுப்பை வகிப்பேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் அமெரிக்காவை தாயகமாக கொண்ட டெஸ்லா ஆதிக்கம் செலுத்தி வருவது உங்களுக்கே நன்றாக தெரியும். இத்தனைக்கும் இந்தியா போன்ற சில நாடுகளில் டெஸ்லா கார்கள் விற்பனையில் இல்லை. இருப்பினும் இத்தகைய உயரத்தை டெஸ்லா அடைந்துள்ளது. டெஸ்லா மட்டுமின்றி, ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் நிறுவனத்தையும் எலான் பராமரித்து வருகிறார்.

ஆனால் இத்தகையவரிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்பது அவரை பற்றிய ஆச்சிரியமான விஷயங்களில் ஒன்றாகும். பெரும்பாலும் தனது அலுவலங்களையே வசிப்பிடமாக பயன்படுத்திவரும் எலான் மஸ்க்கை பெரும்பாலானோர் விசித்திரமானவர் என்றே கூறுகின்றனர். அவரது செயல்பாடுகளும் அவ்வாறே உள்ளன. இத்தகையவர் அமெரிக்காவில் செலுத்தவுள்ள வரி தொகையான 11 பில்லியன் டாலர்களை தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாயில் கணக்கிட்டு பார்த்தால் சுமார் ரூ.83 ஆயிரம் கோடியை தாண்டுகிறது.


Click it and Unblock the Notifications








