முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் விமானம்.. இந்த பிளேன்ல இவ்ளோ தூரம் பயணிக்க முடியுமா?
உலக நாடுகள் அனைத்தும் பசுமை இயக்கத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் இந்த பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து ஒழித்துவிட்டு, எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியிலேயே உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. 2050ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதே உலக நாடுகள் பலவற்றின் திட்டமாக உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெதர்லாந்தைச் சேர்ந்த எலைசியன் (Elysian) எனும் நிறுவனமே மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயார் செய்திருக்கின்றது. எலைசியன் ஓர் ஸ்டார்ட்-அப் விமான தயாரிப்பு நிறுவனம் ஆகும். முன்னணி விமான உற்பத்தியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அது இந்த புதிய விமானத்தைத் தயார் செய்திருக்கின்றது.

இந்த விமானத்தில் ஓர் முழு சார்ஜில் 500 மைல்கள் தூரம் வரை பறக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. அதாவது, 805 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்க முடியும். இதுதவிர, இந்த விமானத்தில் சுமார் 90 பேர் வரை பயணிக்க முடியும்.
இத்தகைய மிக தாராளமான மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் விமானத்தையே எலைசியன் தற்போது தயார் செய்திருக்கின்றது. வழக்கமான எரிபொருளில் இயங்கம் விமானத்தை விட மிக மிக குறைவான அளவிலேயே இது கார்பனை வெளியேற்றும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
சுமார் 90 சதவீதம் வரை இந்த விமானம் பயன்பாட்டினால் காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியுமாம். மின்சாரத்தில் இயங்கும் இந்த விமானத்திற்கு எலைசியன் நிறுவனம் இ9எக்ஸ் (E9X) எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றது. இந்த விமானத்தின் உற்பத்தி பணிகள் இப்போது மிகவும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இது 2030ம் ஆண்டிற்கு உற்பத்தி செய்யும் அளவிற்கு முன்னேற்றம் காணும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விமானம் புதுமையான வடிவமைப்பைக் கொண்டிருக்கின்றது. 8 புரொப்பல்லர் என்ஜின்களையும், நீளமான இறக்கைகளையும் இது கொண்டிருக்கும். 138 அடி நீளம் கொண்டதே அதன் இருக்கைகள் ஆகும். போயிங் 737 அல்லது ஏர்பஸ் ஏ320 ஆகிய விமானங்களை விட மிக பெரிய இறக்கைகளை இது ஆகும்.
இந்த இரண்டு விமானங்களும் இ9எக்ஸ் எலெக்ட்ரிக் விமானத்தைவிட இரு மடங்கு அதிகம் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விமானத்தை டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணையுடனேயே எலைசியன் வடிவமைத்திருக்கின்றது. விமானங்களை மின்சார அவதாரத்தில் உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமான ஓர் வேலையில்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
சாலையில் பயணிக்கும்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜ் தீர்ந்து போகும் எனில் அதை உடனடியாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், விமானங்களில் அப்படி செய்ய முடியாது. ஆகையால், இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவைப்படும். அதுதவிர, பேட்டரிகள் மிக மிக அதிக எடைக் கொண்டவை ஆகும்.
இது விமானத்தின் இயங்கு திறனில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவ் இந்த மாதிரியான அனைத்தையும் கவனத்தில் கொண்டே எலைசியன் தன்னுடைய மின்சார விமானத்தை தயார் செய்து வருகின்றது. விமானத்திற்கான பேட்டரிகள் விமானத்தின் றெக்கைகளில் நிலை நிறுத்தப்பட உள்ளன. எனவே, இதன் இயக்கத்தில் மிகப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என யூகிக்க முடிகின்றது.
மேலும், இப்போதைய நிலவரப்படி விமான நிலையங்களின் உள்கட்டமைப்பில் பேட்டரியால் இயங்கும் விமானங்களுக்கான அடிப்படை வசதிகள் தயாராக இல்லை. இதனாலும், இ9எக்ஸ் எலெக்ட்ரிக் விமானம் பயன்பாட்டிற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார விமானத் தயாரிப்பில் இன்னும் சில விமான தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில் எலைசியன்-க்கு போட்டியாக ஜுரோஏவியா (Zero Avia), எவியேஷன் (Eviation) மற்றும் ஹார்ட் ஏரோஸ்பேஸ் (Heart Aerospace) போன்ற நிறுவனங்களும் மின்சார விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போட்டியாளர்கள் எலைசியன் தயாரிக்கும் விமானம் மிகப்பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார விமானத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியிருப்பதன் வாயிலாக, எலைசியன் நிறுவனம் விமானத்துறையில் கார்பன் தடயத்தைக் குறைக்கும் லட்சிய பணியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், விரைவிலேயே மின்சார விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், விரைவில் பறக்கும் கார்களும் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








