ரொம்ப சந்தோஷம்... போலீசுக்கு உதவியாக களத்தில் இறங்கிய இன்ஜினியர்கள்... எதற்காக தெரியுமா?
காவல் துறைக்கு உதவியாக இன்ஜினியர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களை திருடி செல்ல கொள்ளையர்கள் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி வருவதால், வாகன உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சில சமயங்களில் வாகன உரிமையாளர்களின் அலட்சியமே கொள்ளையர்களின் பணியை எளிதாக்கி விடுகிறது.

வாகன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்களை போலீசாரால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடிவதில்லை. வாகன திருட்டு தொடர்பான சில வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழலில், திருடப்பட்ட வாகனங்களை போலீசார் ட்ரேஸ் செய்வதற்கு உதவியாக நவீன மென்பொருள் ஒன்றை இன்ஜினியர்கள் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இனி புனே நகர சாலைகளில், பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் அதிர்ஷ்டத்தை இழக்க உள்ளன. போலியான நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கும் இனி சிக்கல்தான்.

இதுபோன்ற வாகனங்களை டிராக் செய்து பிடிப்பதற்கு வசதியாக புதிய சிஸ்டம் ஒன்றை புனேவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி இன்ஜினியர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த சாப்ட்வேர் இன்னும் ஆறு மாதங்களில் தயாராகி விடும் என அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் குற்ற வழக்குகளை முடிப்பதில் போலீசாருக்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புனே அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரான விட்டல் பண்டல் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புனே இன்ஜினியரிங் கல்லூரி இன்ஜினியர்களும் இந்த பணியில் இணைந்துள்ளனர். இதுகுறித்து விட்டல் பண்டல் கூறுகையில், ''புனே போக்குவரத்து போலீசாரின் தற்போதைய போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேரை இன்னும் வலுப்படுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது இந்த மென்பொருளை டெவலப் செய்யும் பணிகளில்தான் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஆறு மாதங்களுக்கு உள்ளாக அது தயாராகி விடும்'' என்றார். தற்போதைய அமைப்பின்படி, சிக்னலை மீறி செல்வது, சீட் பெல்ட் அணியாதது, ஹெல்மெட் அணியாதது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு சலான் அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து விட்டல் பண்டல் மேலும் கூறுகையில், ''கூடுதல் தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலமாக அதே அமைப்பில்தான் தற்போது நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்கள் டெக்னாலஜி மூலம் தற்போதைய சிஸ்டத்தை மேம்படுத்திய பின், பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட, திருடப்பட்ட மற்றும் டூப்ளிகேட் நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களை கண்டுபிடிக்க முடியும்'' என்றார்.

குற்ற வழக்குகளை முடிப்பதிலும், பாதுகாப்பை அதிகரிப்பதிலும் இது போலீசாருக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சியை புனே காவல் துறை வரவேற்றுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''இந்த டெக்னாலஜி நன்றாக உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்துவிட்டால், சந்தேகத்திற்குரிய வாகனங்களை மானிட்டர் செய்வதில் புனே காவல் துறைக்கு நிச்சயமாக உதவும்.

அதேபோல் குற்ற வழக்குகளை முடிக்கும் பணிகளும் வேகமாகும்'' என்றனர். பொறியாளர்கள் மற்றும் காவல் துறையினரின் இந்த முயற்சிக்கு வாகன உரிமையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்திதான் கொள்ளையர்கள் வாகனங்களை திருடி செல்கின்றனர். அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களுக்கு செக் வைப்பது பாராட்டுக்குரியதுதான்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








