மின்சார சாலை... எலக்ட்ரிக் கார் போக்குவரத்தில் ஓர் புரட்சிகர தொழில்நுட்பம்!
சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மின்சார கார்களை வாங்க விரும்புபவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியும், அச்சமூட்டும் விஷயமாக இருப்பது, அதற்கு சார்ஜ் ஏற்றுவதுதான். பேட்டரி சார்ஜில், குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செல்ல முடியும் என்ற அச்சுறுத்தலும், அதனை சார்ஜ் ஏற்றுவதற்கு ஆகும் கால விரயமும் பலரை பின்வாங்க செய்கிறது. மேலும், அந்த கார்களில் சார்ஜ் தீர்ந்து போனால், நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்படும்.
மின்சார கார்களை சார்ஜ் ஏற்றுவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தநிலையில், இங்கிலாந்து அரசு மின்சார கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதத்தில், ஓர் முன்னோடி திட்டத்தை தீவிரமாக கையிலெடுத்துள்ளது.
அதாவது, மின்சார கார் அல்லது வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது, அதன் பேட்டரி சார்ஜ் ஆகும் விதத்தில், பொது பயன்பாட்டு சாலைகளில் மின் தட பாதையை அமைக்க உள்ளது. இந்த புதிய மின் தட சாலையில், மின்சார வாகனங்களை செலுத்தி, சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட இருக்கின்றன. சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில், எலக்ட்ரிக் வாகன போக்குவரத்தில் இந்த புதிய மின்மயமாக்கப்பட்ட சாலை தொழில்நுட்பம் ஓர் புதிய பாதையை வகுக்கும்.

சோதனை
முதல்கட்டமாக, இந்த மின்சார சாலைகளை தனி இடத்தில் அமைத்து 18 மாதங்கள் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் சோதனைகள் துவங்கப்படும். சோதனைகளில் வெற்றி கிட்டினால், இந்த மின்சார சாலை திட்டத்தை பொது போக்குவரத்து சாலைகளிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர இங்கிலாந்து அரசு திட்டமிட்டு இருக்கிறது.

வயர்லெஸ் சார்ஜ்
சோதனையில் பயன்படுத்த இருக்கும் மின்சார வாகனங்களில் கம்பியில்லா மின் பரிமாற்ற தொழில்நுட்பத்தில், காரின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கான பிரத்யேக கருவி பொருத்தப்பட்டிருக்கும். அதேபோன்று, அந்த மின்சார சாலையின் மேற்புறத்தில் மின் கம்பி வடங்கள் பதிக்கப்பட்டிருக்கும். மின் கம்பி வடத்திலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளை காரில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் கருவி கிரகித்து, அதனை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும்.

புரட்சிகர நுட்பம்
வீட்டில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பேட்டரி கார்களை சார்ஜ் செய்ய முடியும் என்ற நிலையை, இந்த புரட்சிகர தொழில்நுட்பம் மாற்றும். மேலும், முழுமையாக சார்ஜ் செய்வதற்கான பல மணிநேர கால விரயமும் தவிர்க்கப்படும். இதன்மூலம், மின்சார கார்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

முதலீடு
இந்த முன்னோடி திட்டத்திற்கு 500 மில்லியன் பவுண்ட் தொகையை இங்கிலாந்து அரசு செலவிட உள்ளதாக, அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆன்ட்ரூ ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் வெற்றி பெற்றால், அனைத்து சாலைகளிலும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் வே என்ற மின்மயமாக்கப்பட்ட சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இப்போதைய நுட்பம்
இங்கிலாந்தில் தற்போது வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி கொண்ட பஸ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சார்ஜ் ஏற்றும் நிலையத்தில் நிறுத்தினால் மட்டுமே இந்த வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்ய முடியும். ஆனால், புதிய மின்மயமாக்கப்பட்ட சாலை மூலமாக, பயணித்துக் கொண்டிருக்கும்போதே பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

முதல்முறை அல்ல...
இங்கிலாந்தில் கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய மின்சார வாகன சாலை திட்டம், ஏற்கனவே தென்கொரியாவில் பயன்பாட்டில் இருக்கிறது. சுமார் 12 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மின்மயமாக்கப்பட்ட சாலையில், மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு Shaped Magnetic Field in Resonance என்று அழைக்கப்படும் தொழில்நுட்பத்தில், இந்த வயர்லெஸ் சார்ஜ் முறையின் மூலமாக, பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications