எதிர்ப்பு எதிரொலி: மைல்கற்களில் இந்திக்கு பதில் மீண்டும் இடம்பிடித்த ஆங்கிலம்!
தமிழக நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் எழுதப்பட்டு வந்த இந்தி எழுத்துக்களுக்கு பதிலாக மீண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சில ஊர்களின் பெயர் பலகைகள், மைல் கற்கள் ஆகியவற்றில் கடந்த ஒரு மாதமாக ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டு வந்தன. கடும் சர்ச்சைக்கு உள்ளான இப்பிரச்சனை தற்போது நெடுஞ்சாலை ஆணையம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள பெயர்ப் பலகைகளிலும் மைல் கற்களிலும் உள்ள ஊரின் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக இந்தியில் பெயர்கள் எழுதப்பட்டு வந்தன.

நெடுஞ்சாலைத்துறையின் இச்செயலால் தமிழ் மற்றும் இந்தி தெரியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர். மேலும் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில், மைல்கற்களில் பழைய முறையில் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்திலேயே எழுதுமாறு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்களும், தமிழக அரசியல்கட்சியினர் பலரும் நெடுஞ்சாலைத்துறைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதன்காரணமாக, இந்தியில் எழுதப்படுவதற்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாக தற்போது பழைய நிலையில், மைல்கற்களில் ஆங்கிலத்திலும் தமிழிலும் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன.

வேலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் காட்பாடி ரயில் நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 75 மற்றும் 77 ஆகியவற்றில் உள்ள மைல்கற்களில் தமிழில் பெயர்களை மாற்றி எழுதி வருகிறது நெடுஞ்சாலை ஆணையம்.

கடந்த ஒரு மாத காலமாக ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு அதற்கு பதிலாக இந்தியில் எழுதப்பட்டு வந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலத்தில் எழுத்துக்களை மாற்றி எழுதி வருகின்றனர் நெடுஞ்சாலை ஊழியர்கள்.

இதன்மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இந்தி தெரியாத பலரும் சுலபமாக இடங்களை தெரிந்து கொள்ள முடிவதாகவும் கூறுகின்றனர்.

நெடுஞ்சாலைத்துறையின் இந்த முடிவிற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








