டீசலிலும் எத்தனால் கலந்து சோதனை நடத்திய மத்திய அரசு... ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது?
பெட்ரோலில் எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டீசலிலும் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் டீசலில் எத்தனால் கலப்பு செய்வதால் அதன் குறைந்தபட்ச தீப்பற்றும் புள்ளி மிகவும் குறைந்ததால், இந்த சோதனை எதிர்பார்த்த தரத்தை எட்டவில்லை. எனவே, எத்தனால் டீசலை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,"பெட்ரோல் போன்று டீசலிலும் எத்தனால் கலப்பது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலமாக அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வகச் சோதனைகளில் எத்தனால் கலந்த டீசல் குறைந்தபட்ச தீப்பற்றும் புள்ளியை எட்டவில்லை. மேலும், எத்தனால் கலக்கும்போது டீசலின் குறைந்தபட்ச தீப்பற்றும் அளவு வெகுவாக குறைந்தது. எனவே, எத்தனால் கலப்பு டீசலை இப்போதைக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலாது," என்று தெரிவித்துள்ளார்.
டீசலின் குறைந்தபட்ச தீப்பற்றும் புள்ளி (Flash Point) 52 டிகிரி செல்சியாக இருக்க வேண்டும். ஆனால், டீசலுடன் எத்தனால் கலக்கும்போது அது 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு கீழே குறைந்துவிட்டது. இதனால் ஆய்வக சோதனையில் எதிர்பார்த்த தரநிலையை எட்டவில்லை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக டீசலுடன் எத்தனால் கலந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலாது.
அதேநேரத்தில், டீசலுடன் ஐசோபியூட்டனால் உயிரி எரிபொருள் கலக்கும் யோசனையும் எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ளது. இதுறித்து அமைச்சர் சுரேஷ் கோபி கொடுத்துள்ள விளக்கத்தில், "தற்போதைக்கு டீசலில் ஐசோபியூட்டனால் எதுவும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை. பெட்ரோலில் 20 சதவீதத்திற்கும் மேல் எத்தனால் கலக்கும் திட்டமும் இல்லை," என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.
தவிரவும், எத்தனாலை சமையல் எரிபொருளாக பயன்படுத்துவதற்கான மதிப்பீடுகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. இதன்மூலமாக, எல்பிஜி எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், உள்நாட்டில் எத்தனால் உற்பத்தி மூலமாக இறக்குமதியை குறைத்து அன்னிய செலவானியை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
நாடுமுழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் விற்பனை செய்யப்படும் நிலையில், இதற்கு எதிராக பல்வேறு புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், டீசலிலும் எத்தனால் கலந்து மத்திய அரசு சோதனை நடத்தியத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், இந்த சோதனைகளில் எத்தனால் கலந்த டீசல் எதிர்பார்த்த தரத்தை எட்டாததால், இப்போதைக்கு இதுகுறித்து வாகன உரிமையாளர்கள் கவலை கொள்ள தேவையில்லை.


Click it and Unblock the Notifications