பெட்ரோல் விலையை நெனச்சு இனி கவலைப்பட வேண்டியதில்லை... சூப்பரான முடிவை எடுத்த ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?
பெட்ரோல் விலையை நினைத்து இனி இந்திய மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எத்தனாலை (Ethanol) மாற்று எரிபொருளாக பயன்படுத்துவதை ஒன்றிய அரசு வேகப்படுத்தியுள்ளது. இதன்படி இன்னும் 6 மாதங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனைக்கு கிடைக்கும். எத்தனாலை விற்பனை செய்யும் பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே எத்தனால் கிடைக்கும் பகுதிகளில் எத்தனால் பங்க்குளை திறக்கும்படி, பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை செயலாளர் தருண் கபூரும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்படி 100 சதவீதம் முழுமையான எத்தனால் (E100) மூன்று பங்க்குகளில் கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வரும் நாட்களில் எத்தனால் கிடைக்கும் பங்க்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்களுடன் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஆரம்பத்தில் E20 எரிபொருளை 2030ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. E20 என்பது பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருள் ஆகும். எனினும் இந்த இலக்கு பின்னர் வந்த நாட்களில் 2025ம் ஆண்டிற்கும், அதன்பின் 2023ம் ஆண்டிற்கும் மாற்றப்பட்டது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் E10 பெட்ரோல் கிடைக்கிறது. அதாவது 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் கிடைக்கிறது. இந்தியாவின் 80 சதவீத பகுதிகளில் தற்போது E10 கிடைத்து வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் E10 எரிபொருள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். அதிகமாக கிடைக்க கூடிய கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து போதுமான அளவு எத்தனாலை தயாரிக்கும் திறன் இந்தியாவிற்கு உள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார ரீதியில் இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். அத்துடன் சுற்றுச்சூழல் ரீதியாகவும் இந்தியாவிற்கு நன்மைகள் கிடைக்கவுள்ளது. ஏனெனில் எத்தனால் சுற்றுச்சூழலை பெரிதாக மாசுபடுத்தாது.

அத்துடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் இந்திய விவசாயிகளும் பொருளாதார ரீதியில் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் எத்தனாலின் விலை குறைவு என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் எத்தனால் பயன்பாடும் ஊக்குவிக்கப்படுவது சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை. தற்போது பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் எரிபொருளின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.

இந்த வரிசையில் இந்தியாவிலும் அடுத்த சில ஆண்டுகளில் எத்தனால் எரிபொருள் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் வளம் குறைந்து கொண்டே வரும் நிலையில் மாற்று எரிபொருளுக்கு மாறியாக வேண்டிய தேவை இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இருக்கிறது.

அத்தகைய நாடுகளும் எலெக்ட்ரிக், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை தற்போது வேகமாக ஊக்குவித்து வருகின்றன. எனவே எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள்தான் நமது எதிர்கால போக்குவரத்தின் தூணாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








