அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவங்க தான் முக்கியமா தெரிஞ்சிக்கனும்! இவி சார்ஜரை தைரியமா கேளுங்க!
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசின் புதிய வழிகாட்டுதல்கள் காரணமாக, குடியிருப்புகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான (EV) சார்ஜிங் நிலையங்களை அமைப்பது எளிதாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்திற்கு எதிராக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் இவி (EV) சார்ஜரை நிறுவிக்கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் (Karnataka High Court) வரை சென்றது. பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்தால், ஒரு குடியிருப்பாளர் தனது குறிப்பிட்ட பார்க்கிங் (Parking) பகுதியில் இவி சார்ஜரை நிறுவும் உரிமையை மறுக்க முடியாது என்பதை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

பெங்களூருவின் தொட்டபல்லாபூர் சாலையில் உள்ள தனியார் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் நவீன் நாகேந்திரா, தனது பார்க்கிங் பகுதியில் ஒரு தனி இவி சார்ஜிங் லைன் (Charging Line)-ஐ நிறுவ அனுமதி கோரியபோது இந்த சர்ச்சை தொடங்கியது. குடியிருப்பு சங்கம் இந்த நடவடிக்கையை எதிர்த்தது. பல அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட இந்த வளாகத்தில், பெரும்பாலான பார்க்கிங் இடங்கள் குடியிருப்பு அமைந்துள்ள கட்டிடத்தில் இல்லை.
ஒவ்வொரு குடியிருப்பாளரும் தனி சார்ஜிங் லைன் கோரினால், கட்டிடம் முழுவதும் கேபிள்கள் கிடந்து, கட்டிடத்திற்கும் குடியிருப்பாளர்களுக்கும் கடுமையான பாதுகாப்புக் கேடுகளை ஏற்படுத்தும் என்று சங்கம் கவலை தெரிவித்தது. இந்த விவகாரம் இறுதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை வந்தடைந்தது. ஒரு குடியிருப்பில் சார்ஜிங் யூனிட்டை நிறுவ பெஸ்காம் (பெங்களூரு மின் விநியோக நிறுவனம் லிமிடெட்) நிறுவனத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NoC) பெற தேவையில்லை என்று பெஸ்காம் 2023 ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பை நீதிமன்றம் மேற்கோள் காட்டி குறிப்பிட்டது.

அதே நேரத்தில், பெரிய குடியிருப்பு வளாகங்களில் தனிப்பட்ட சார்ஜிங் லைன்களை திட்டமிடாமல் அனுமதிப்பது நடைமுறைச் சவால்களை உருவாக்கலாம் என்கிற குடியிருப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு கவலைகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இருப்பினும், மனுதாரருக்கு ஒரு தனி சார்ஜிங் லைன் பெற உரிமை உண்டு என்பதில் உயர் நீதிமன்றம் தெளிவாக இருந்தது.
குடியிருப்பு சங்கம் இதை முழுமையாக மறுக்க முடியாது. அவர்கள் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பெஸ்காம் மற்றும் பிற ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கலந்தாலோசனையை நான்கு வாரங்களுக்குள் முடித்து, சார்ஜர் நிறுவலை எளிதாக்குமாறும் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
குடியிருப்பாளர் சங்கங்களுக்கும், இவி உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இவி பேட்டரிகள் (Batteries) அதிக சார்ஜ் ஆகுமோ அல்லது தீ பிடிக்குமோ என்கிற அச்சத்தின் காரணமாக பல சங்கங்கள் அனுமதி மறுக்கின்றன. சிலர் மின்சார சுமை திறன் குறைபாடு, இடப்பற்றாக்குறை அல்லது அனுமதிச் சிக்கல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.
இதனால், குடியிருப்பாளர் சங்கங்கள் நிறுவிய அந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கான சார்ஜர்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில், வீட்டு உபயோக மீட்டர்கள் மூலம் சார்ஜ் செய்வதற்கு சங்கங்கள் அபராதம் கூட விதிக்கின்றன. சென்னை, மும்பை, நொய்டா, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் இதுதொடர்பாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
பொது சார்ஜர்களை மட்டுமே சார்ந்து இருந்தால் இவி உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். வீட்டில் சார்ஜ் செய்வது இரவு நேர வசதியையும் மன அமைதியையும் வழங்குகிறது. மேலும், DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை விட வீட்டிலேயே சார்ஜ் செய்வது மிகவும் சிக்கனமானது. நல்ல செய்தி என்னவென்றால், இப்போது அரசு இதில் தலையிடுகிறது. பல உயர் நீதிமன்றங்கள் குடியிருப்பு சங்கங்களுக்கு இவி சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளன.
வாகன பார்க்கிங் பகுதிக்கான சொத்து உரிமையில் சார்ஜிங் உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதும் அடங்கும் என்பதை நீதிமன்றங்கள் வலியுறுத்தி உள்ளன. மத்திய மின்துறை அமைச்சகம் 2024 செப்டம்பரில் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், குடியிருப்பு சங்கங்கள் தங்கள் குடியிருப்பாளர்கள் தங்கள் பார்க்கிங் இடங்களில் இவி சார்ஜர்களை நிறுவுவதைத் தடுக்க முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டு இருந்தன.
குடியிருப்பாளர்கள் ஏற்கனவே உள்ள வீட்டு உபயோக மீட்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். தனி இவி மீட்டர்கள் அமைப்பது அவரவர் விருப்பம். மின்சாரம் சுமை அதிகரிப்புக்கு குடியிருப்பாளர் நேரடியாக விண்ணப்பிக்கலாம். குடியிருப்பு நலச் சங்கங்கள் அபராதம் விதிக்கவோ அல்லது சமூக சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்த மக்களை கட்டாயப்படுத்தவோ முடியாது.
டெல்லி அரசின் இவி கொள்கையில், புதிய குடியிருப்பு சங்கங்களில் 20% பார்க்கிங் இடங்கள் இவி பயன்பாட்டிற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று இப்போது கட்டாயமாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களும் இதே போன்ற கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் இத்தகைய பல கட்டாய விதிமுறைகள் நம் தமிழ்நாட்டிலும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குடியிருப்பு சங்கங்களின் கவலைகள் நியாயமானதாக இருக்கின்றன. ஏனெனில், பெரும்பாலான பழைய குடியிருப்பு வளாகங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பரவலாக வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கட்டப்பட்டவை. அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சுமை பல எலெக்ட்ரிக் கார்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யப் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இரவு நேர அதிக தேவை மின்மாற்றிகள் (Transforms)-ஐ பாதிக்கலாம்.
தீ விபத்து அபாயங்கள் மற்றும் மின் விநியோக நிறுவனங்களிடம் இருந்து அபராதங்கள் போன்ற பிரச்சனைகள் இதில் உள்ளன. கட்டிடத்தின் பழைய உள்கட்டமைப்பை மாற்றுவது எளிதல்ல. இவி சார்ஜிங்கிற்கு தனி கேபிள்கள், சரியான எர்திங், தீ தடுப்பு குழாய்கள் மற்றும் போதுமான காற்றோட்டம் தேவை. மேலும், அடித்தள பார்க்கிங் பகுதிகளில் இடவசதி குறைவாக இருக்கும். இவையனைத்தும் சங்கங்களுக்கு கவலையை அளிக்கின்றன. இருப்பினும், தற்போது கர்நாடகா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி வரும் நாட்களில் இன்னும் நிறைய பேர் தங்களது குடியிருப்பில் இவி சார்ஜிங் வசதியை எதிர்பார்ப்பர்.


Click it and Unblock the Notifications








