20 சதவிகித மின்வாகன விற்பனையகங்கள் இழுத்து மூடப்பட்ட சோகம்... காரணம் என்ன...!
கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் இதுவரை 20 சதவிகிதம் மின்வாகன விற்பனையகங்கள் மூடப்பட்டு, மாற்று தொழிலுக்கு மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக மிகப் பெரிய போரை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இவையனைத்தும், எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் செலவீணம் மற்றும் பின்விளைவுகளை தவிர்க்கவே செய்யப்பட்டு வருகின்றன.

ஆகையால், பின்வரும் எதிர்காலங்களில் இந்தியாவின் அனைத்து சாலைகளையும் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆளவிருப்பது தற்போதே உறுதியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு சலுகைகளை அரசு அறிமுகம் செய்து வருகின்றது.

இருப்பினும், மின் வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் ஆரம்ப புள்ளியிலேயே நின்றுக் கொண்டிருக்கின்றது. மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் குறைபாடு, போதிய நிதியுதவி வசதியின்மை மற்றும் அதிக விலை உள்ளிட்ட காரணங்களால் மின் வாகன பயன்பாடு மக்கள் மத்தியில் சென்றடையவில்லை.

இதன்காரணமாக, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இன்றளவும் மந்த நிலையிலேயே இருக்கின்றது. இதனால், மின்வாகன விற்பனையாளர்கள் பலர் தங்களது, விற்பனை நிலையங்களை முடக்கிவிட்டு மாற்று தொழிலுக்கு மாறி வருகின்றனர். அந்தவகையில், நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் 860 மின் வாகன டீலர்கள் ஷோரூம் நாட்டில் செயல்பட்டு வந்தன.

அதில், 20 சதவிகித டீலர்கள், குறைவான விற்பனை காரணமாக தங்களது ஷோரூம்களை இழுத்து மூடியுள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இதற்கு, மேற்கூறிய காரணங்கள் மட்டுமின்றி, மின் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம்-2 திட்டமும் ஓர் முக்கிய காரணமாக இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஃபேம்-2 திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மின் வாகன உற்பத்தியாளர்கள் அதனை சந்திக்க கடுமையான மாற்றங்களை, அதன் மின் வாகனங்களில் மேற்கொள்ள இருக்கின்றது. மேலும், அந்த வாகனங்கள் அனைத்தும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஐகேட் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல் சான்று பெற வேண்டும்.

இதற்கு குறைந்தது, 2 மாதத்திலிருந்து இரண்டரை மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இந்தியாவிலோ 26க்கும் மேற்பட்ட மின் வாகனங்களின் மாடல்கள் தற்போது இருக்கின்றன. அவை, ஒவ்வொன்றையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளிக்கொண்டுவர நீண்ட நாள் தேவைப்படுகின்றது. ஆகையால், காத்திருப்பு காலம் அதிகரிக்கப்படுகின்றது.

இதனால், மின் வாகன டீலர்கள் இரண்டு மாதங்களுக்கு விற்பனையைத் தவிர்க்கும் சூழல் ஏற்படுகின்றது. இதுபோன்ற பல காரணங்களால் மின் வாகனங்களின் விற்பனை மிகவும் மந்த நிலையைச் சந்தித்து வருகன்றது.

இவ்வாறு, மின் வாகனங்களின் வீழ்ச்சியைச் சந்திப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சரியாக கடந்த ஆறு வருடங்களுக்கு, என்ஆர்இ அமைச்சகம் மின் வாகனங்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகைகளை ரத்துசெய்தபோது, இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications