இந்த மின்சார வாகனங்களின் விலை எப்போதுதான் குறையுமோ.. கவலைபடாதீங்க Bro பாதிக்கு பாதி குறையபோகுதாம்..
மின்சார வாகனங்களின் விலை எரிபொருளில் இயங்கும் ஐசி எஞ்ஜின் வாகனங்களின் விலையைக் காட்டிலும் மாலிவானதாக மாறும் என முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் யார், எப்படி மின்சார வாகனங்களின் விலை இந்தளவிற்கு குறையும் என்பதுகுறித்த தகவலை விரிவாக கீழே பார்க்கலாம்.

இந்திய மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்குமான மிகப் பெரிய தேடல்களில் ஒன்றாக மின்சார வாகனங்கள் மாறியுள்ளன.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மாசுபாடு அடர்த்தியை நாம் கணிக்க முடியாத இலக்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதனால், இனம் அறிய முடியாத வியாதிகள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் போன்ற காலநிலை மாற்றத்திலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.

இவையனைத்திற்கும் தீர்வு காணும் விதமாக மின் வாகனங்களை நாடு முழுவதிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த மின்வாகனங்களோ ஏழை, எளியோர் வாங்க முடியாத அளவிற்கு உச்சபட்ச விலையைக் கொண்டவையாக காட்சியளிக்கின்றன.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் குறிப்பிட்ட முயற்சிகளின் மூலம் மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

அந்தவகையில் கொண்டுவரப்பட்டதுதான் ஃபேம் மானியம் திட்டம். ஆனால், இத்திட்டம் முழுமையான பயனை அளிக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. குறிப்பாக, இது மலிவு விலைக் கொண்ட குறைந்த வேக வாகனங்களுக்கு துளியளவும் பயனளிக்காத சூழலே நிலவுகின்றது. ஆகையால், உயர் திறனில் கிடைக்கும் அதிக விலை மின்சார வாகனங்களுக்கே அது பயனளிக்கின்றது. இதனால், ஃபேம்-2 திட்டம் பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர்வகுப்பு மக்கள் மட்டுமே அனுபவிக்கின்ற வகையில் உள்ளது.

ஆகையால், ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் மலிவு விலையில் தரமான மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து, அனைத்து வகுப்பு மக்களையும் ஈர்க்கின்ற வகையிலான முயற்சியில் களமிறங்கியுள்ளது. ஆனால், அவை வெளியாவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டின் மிக முக்கியமான ஓர் அமைப்பைச் சார்ந்த அதிகாரி இன்னும் மூன்று ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விலை தற்போது விற்பனையில் இருக்கும் ஐசி (எரிபொருள்) எஞ்ஜின் வாகனங்களின் விலையைக் காட்டிலும் மலிவான தொகையில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் டபிள்யூ.எஸ்.டி.எஸ்., நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில், கலந்துக்கொண்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த்தான் இவ்வாறு கூறியுள்ளார்.
"மின் வாகனங்களின் செயல்பாட்டில் மிக முக்கியமான பங்கினை வகிக்கும் பேட்டரிகளின் விலை 51 சதவீதம் வரை குறையும் வாய்ப்புள்ளது. இதனால், மின்வாகனங்களின் விலை தற்போது இருப்பதைக் காட்டிலும் மிகக் கடுமையாக குறையும் சூழல் ஏற்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய நிலையில் பேட்டரிகளின் விலை ஒரு கிலோ வாட் அல்லது யூனிட்டிற்கு 156 அமெரிக்க டாலர்களாக உள்ளன. இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 76 டாலர்களாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்கமானது மின்சார கார்களின் விலையில் எதிரொளிக்கும். இதனால், மின்சார வாகனங்களின் விலை நாம் எதிர்பார்க்காத அளவைக் காட்டிலும் குறையும்" என்றார்.

இத்துடன், வாகன உற்பத்தியாளர்கள் சார்பில் மின் வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஏற்படுத்தித் தரவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மின்வாகனங்கள் மக்கள் மத்தியில் முழு வீழ்ச்சில் பரவாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் சார்ஜிங் நிலையங்கள் பற்றாக்குறையும் ஒன்றாக இருக்கின்றது. நீண்ட தூர பயணங்களில் மின்வாகனங்களின் சார்ஜ் தீர்ந்துவிடுமேயானால், பயணிகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

ஆகையால், நாடு முழுவதும் மின்வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இத்துடன், குறைந்த அளவே மாசை ஏற்படுத்தும் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி தரத்திலான வாகனங்களை பொது பயன்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி அதிக மைலேஜ் வழங்கும் ஹைட்ரோஜன் ப்யூவல் எஞ்ஜின் வாகனங்களையும் பொதுபயன்பாட்டு வாகனங்களில் களமிறக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கூறியாதைப் போல் இந்த நடவடிக்கை நடைமுறையில் கொண்டுவரப்பட்டால் மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஓர் நிரந்தர தீர்வு எட்ட முடியும் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கான சந்தை நீண்டு விரிந்து காணப்படும். இதனால், எரிபொருள் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவில் குறைந்து நிதியிழப்பு தவிர்க்கப்படும். தொடர்ந்து, மக்களுக்கும் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கவும் இந்த மின்வாகனங்கள் உதவும்.


Click it and Unblock the Notifications








