கடந்த ஆண்டுகளை காட்டிலும் இப்போது இ-வாகனங்கள் அதிகம் விற்பனையாவது உண்மைதானா? புள்ளி விபரங்கள் என்ன சொல்கின்றன?
உண்மையிலேயே நாட்டில் மின்சார வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றதா?, என்பதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. சமீபத்தில் மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே எழுத்து பூர்வமான ஓர் தகவலை மின்சார வாகன விற்பனைகுறித்து வெளியிட்டார். இதன் வாயிலாக தெரிய வந்திருக்கும் முக்கிய தகவல்களை கீழே உள்ள பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் தகவலுக்குள் போகலாம்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக நாள்தோறும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஊடகங்களும் செய்தியை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார வாகனங்களுக்கான டிமாண்ட் இந்திய சந்தையில் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது உண்மைதானா?, இந்தியர்கள் உண்மையில் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனரா?, என்பது பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, 2020 - 2021, 2021 - 2022 மற்றும் 2022 - 2023 ஆகிய ஆண்டுகளில் விற்பனைச் செய்யப்பட்ட மின் வாகனங்கள் பற்றிய புள்ளி விபரங்களே வெளியாகி உள்ளன. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக 2022 - 2023 ஆம் ஆண்டு அமைந்துள்ளது. இந்த ஆண்டில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 901 யூனிட்டுகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
இது டிசம்பர் 9 வரை இந்தியாவில் விற்பனையாகிய மின்சார வாகனங்களின் புள்ளி விபரம் ஆகும். சென்ற ஆண்டான 2021 - 2022 இல் இதே மின்சார வாகன உலகம் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 811 யூனிட்டுகள் விற்பனையை மட்டுமே பெற்றிருந்தன. இதை விட குறைவான எண்ணிக்கையிலேயே 2020 - 2021 ஆம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இந்த ஆண்டில் வெறும் 48 ஆயிரத்து 179 யூனிட்டுகள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு மிகக் குறைவான விற்பனையைப் பெற்று வந்த மின் வாகன உலகமே தற்போது வசந்த காலத்தில் இருப்பதைப் போல் பல மடங்கு அதிகளவு விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியர்கள் மத்தியில் மின்சார வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பது உறுதியாகி உள்ளது. சந்தையில் மின்சார வாகனங்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கியிருப்பதே அதன் அதீத வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
இதனாலேயே கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆண்டில் விற்பனையாகி இருக்கின்றன. மின்சார வாகனங்கள் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதற்கு ஃபேம் 2 திட்டமே முக்கிய காரணமாக இருக்கின்றது. மின்சார வாகனங்களின் விலையைக் குறைக்கும் பொருட்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே இது ஆகும். மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் போன்ற சில சிறப்பான செயல்கள் இந்த திட்டத்தின்கீழே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஃபேம் 2 திட்டம் ஏப்ரல் 1, 2019 அன்றே நடைமுறைக்கு வந்தது. இது இன்னும் ஐந்தாண்டுகளுக்கு அமலில் இருக்கும். இந்த திட்டத்தின்கீழ் அரசு ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கி வைத்துள்ளது. 10 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள், 5 லட்சம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், 55 ஆயிரம் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் (எலெக்ட்ரிக் பயணிகள் கார்கள்) மற்றும் 7,090 இ-பேருந்துகளுக்கு மானியம் வழங்கும் பொருட்டே இத்தகைய பெரும் தொகை மத்திய அரசால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபேம்-2 திட்டத்தின் நோக்கம் நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே அல்ல, மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதியை உருவாக்குவதல், நாட்டில் மின் வாகன உற்பத்தியை ஊக்குவித்தல் உள்ளிட்டவையும் ஃபேம்-2 திட்டத்தின் இலக்காகும். இதுமட்டுமில்லைங்க, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கே ஃபேம்-2 திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படுகின்றது. ஆகையால், வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் மின்சார வாகனங்களை நூறு சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதன் விளைவாக உள்நாட்டு உற்பத்தி திறன் பல மடங்கு வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது. இதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்மையில் மத்திய அரசுக்கு புகார்கள் சென்றிருக்கின்றன. இதன் அடிப்படையில் ஃபேம் - 2 சலுகைகளை சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உடனடியாக நிறுத்தப்பட்டது. அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கும் இந்த நிறுவனங்கள் தங்களின் அனைத்து தயாரிப்புகளும் மேட் இன் இந்திய தயாரிப்பாக உருவாக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








