ரயிலின் கடைசி பெட்டியின் பின்பக்கத்தில் 'X'-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும்... அது ஏன் தெரியுமா?
ரயிலின் கடைசிப்பெட்டிய கவனிச்சா பின்னாடி 'X'-ன்னு வரையப்பட்டுயிருக்கும்... அது ஏன் தெரியுமா..??
கார், மோட்டார்சைக்கிள், விமானங்கள் மற்றும் பேருந்துகள் என போக்குவரத்திற்கு பல வகையான வாகனங்கள் இருந்தாலும் கூட, பெரும்பாலான இந்தியர்களுக்கு முதன்மையான போக்குவரத்து என்றால் இன்றும் ரயில்கள்தான்.

தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ரயில் மூலமாகவே பயணம் செய்பவர்கள் கூட இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்து பலரும் பல விஷயங்களை அறிந்திருந்தாலும் கூட, ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் ஒரு சில விஷயங்கள் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் 'X'. இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியிலும் 'X' என்ற குறியீடு, மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும்.

ரயிலில் பயணம் செய்த மற்றும் பயணம் செய்து கொண்டு இருக்கும் பலரும் 'X' என்ற குறியை நிச்சயமாக கவனித்திருப்போம். ஆனால் இது எதை குறிக்கிறது? 'X' என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன? என்ற சிந்தனை நம்மில் ஒரு சிலருக்கு மட்டும்தான் தோன்றியிருக்கும்.

ஒரு ரயில் முழுமையடைந்த நிலையில் உள்ளது, அதில் எந்தவிதமான பழுதோ அல்லது பிரச்னையோ இல்லை என்பதை குறிக்கவே 'X' என்ற குறி பயன்படுத்தப்படுகிறது. எஞ்சின் தொடங்கி ரயிலின் எல்லா பெட்டிகள் மற்றும் அதனுடைய இயக்கத்திறனை ஆராய்ந்த பிறகே, 'X' குறி ரயிலின் கடைசி பெட்டியில் வரையப்படுகிறது.

மேலும் ரயில்களின் இடைப்பட்ட பெட்டிகள் மற்றும் அதன் இணைப்புகளில் எந்தவிதமான பழுதோ, பிரச்சனையோ இல்லை என்பதை 'X' குறி குறிக்கிறது.ரயிலின் கடைசி பெட்டியின் பின் பக்கத்தில் 'X' என்ற குறியீடு ஏன் வழங்கப்படுகிறது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

ரயிலின் கடைசி பெட்டியில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவலும் உள்ளது. அதுதான் 'LV' என்ற ஆங்கில வார்த்தைகளை தாங்கிய பலகை. கடைசி பெட்டியின் அடிப்பகுதியில் மாட்டப்பட்டு இருக்கும் இந்த பலகையில் எழுத்துக்கள் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில் எழுதப்பட்டு இருக்கும்.

ஒரு ரயில் பாதுகாப்பாக உள்ளது என்பதை துறை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தெரிந்து கொள்ளவே 'LV' எழுத்துக்களை தாங்கிய பலகைகள் மாட்டப்படுகின்றன. ஒருவேளை இந்த பலகை ரயிலின் கடைசிப்பெட்டியில் காணப்படவில்லை என்றால், ரயில் பெட்டிகள் கழன்று இருப்பதை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எளிதில் கண்டறிய முடியும்.

மேலும் ரயில் பெட்டிகள் கழன்று இருந்தால், அது குறித்து ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தவும் இது உதவி செய்கிறது. இதன் மூலம் அந்த வழித்தடத்தில் வரும் பிற ரயில்களையும் நிறுத்த முடியும். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications