வேலையை விட்டு நிற்கும்போது சும்மா நிக்க கூடாது.. ஷோரூமுக்கே தெரியாம 21 டுகாட்டி பைக்குகளை விற்ற ஊழியர்..
ஆந்திரா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள குக்கட்பள்ளியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவர் அதே பகுதியில் உள்ள டுகாட்டி இரண்டு சக்கர வாகன விற்பனையகம் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கின்றார். ஆனால், இப்போது இல்லை. பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டதாதகக் கூறப்படுகின்றது.
நன்றாக பணியாற்றி வந்த நிலையிலேயே திடீரென ஷோரூம் பணி வேண்டாம் என கூறி வேலையை அவர் ராஜினாமா செய்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவரை ஆந்திரா காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். பெரும் தொகையை அவர் மோசடி செய்திருப்பதாகக் கூறி காவல்துறை ராகேஷ் குமாரை கைது செய்திருக்கின்றது.

டுகாட்டி ஷோரூமின் ஜெனரல் மேனேஜர் சிஎன் மகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ராகேஷ் குமார், பணியில் இருந்த காலகட்டத்தில் சுமார் 21 பைக்குகளை நிறுவனத்திற்கே தெரியாமல் வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு இருக்கின்றது.
இதன் தொடர்ச்சியாகவே அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார். வாடிக்கையாளர்கள் பலரின் வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் இருந்ததன் அடிப்படையில் அண்மையில் ஷோரூம் நிர்வாகம் வாகன விற்பனை குறித்து ஆடிட்டிங் செய்திருக்கின்றது. அப்போதே, ராகேஷ் குமார் செய்த அனைத்து மோசடிகளும் தெரிய வந்திருக்கின்றது.

அவர் ஷோரூமிற்கு கணக்கு காட்டாமல் டூ-வீலர்களை விற்பனைச் செய்து கையாடல் செய்த ஒட்டுமொத்த தொகையின் மதிப்பு ரூ. 5.2 கோடி என கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே, ராகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு செப்டம்பர் வரையில் அவர் பல்வேறு பண மோசடி செயல்களைச் செய்திருக்கின்றார். அவர் நிர்வாகத்திற்கு தெரியாமல் விற்ற பைக்குகள் ஒவ்வொன்றும் பல லட்சம் ரூபாய் விலையைக் கொண்டவையாக இருக்கின்றன. குறிப்பாக, அந்த பைக்குகள் ஒவ்வொன்றும் கார்களின் விலைக்கு இணையானையாக இருக்கின்றன.

ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 40 லட்சம் விலையை அவைக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒன்பது டுகாட்டி பனிகேல் (Ducati Panigale), மூன்று மல்டிஸ்ட்ரடா (Multistrada), நான்கு டியாவல் (Diavel), இரண்டு மான்ஸ்டர் (Monster) மற்றும் தலா டெசர்ட் எக்ஸ் (DesertX), ஸ்கிராம்ப்ளர் (Scrambler) மற்றும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 (Streetfighter V4) உள்ளிட்ட பைக் மாடல்களையே ஷோரூம் நிர்வாகத்திற்கு கணக்கு காட்டாமல் அவர் விற்பனைச் செய்திருக்கின்றார்.
இவ்வாறு மோசடி செய்த பணத்தில் ராகேஷ் குமார் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. வாடிக்கையாளர்களிடம் இருந்து பைக்கை விற்றதற்காக பெறப்படும் பணம் பெரும்பாலும் தன்னுடைய கணக்கிற்கு திருப்பிக் கொண்டு, கணிசமான தொகையை மட்டும் ஷோரூம் நிர்வாகத்தின் கணக்கில் வரவு வைத்திருக்கின்றார்.
இதனாலேயே அவர் மீது பெரிய அளவில் சந்தேகம் எழும்பாமல் இருந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே நீண்ட காலமாக பைக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக ஷோரூம் நிர்வாகத்தை முற்றுகையிட ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த நிலையிலேயே ராகேஷின் மோசடி செயல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
ராகேஷின் மோசடிக்கு பின்னால் இன்னும் சிலரும் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மற்ற ஷோரூம் ஊழியர்களின் உதவியுடனேயே அவரால் இந்த அளவு மிகப் பெரிய ஊழலைச் செய்திருக்க முடியும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுதவிர, இந்த 21 வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி இன்னும் சிலரும் ராகேஷால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராகேஷ் இடத்தில் தற்போது காவல்துறை கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை நாட்டில் நடைபெற்ற மோசடிகளில் மிக மோசமான மற்றும் பெரிய மோசடி நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களை ஏமாற்றி கணிசமான கூடுதல் தொகையை ஷோரூம்கள் பார்த்து வந்த நிலையில், இங்கு ஒருவர் ஷோரூம் நிர்வாகத்திற்கு விபூதி அடித்திருப்பது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









