இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டின் விசேஷ படங்கள்!
மறுபயன்பாட்டு ராக்கெட்டின் மாதிரி மாடலை இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது. எதிர்காலத்தில் விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதில் புதிய புரட்சியை படைக்கும் என்பதுடன், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கும் இது பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
இதனால், இந்த ராக்கெட்டின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. விண்வெளி ஓடம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டின் பிரத்யேக தகவல்களை நேற்று டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்தீர்கள். தற்போது இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டின் பிரத்யேக படங்களை இப்போது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் காணலாம்.

விசேஷ எஞ்சின்
மறுபயன்பாட்டு ராக்கெட்டை செங்குத்தாக மேலே எடுத்துச் செல்வதற்கு 9 டன் எடையுடைய ராட்சத எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. பிற ராக்கெட் எஞ்சின்களை போன்று வேகமாக எரிபொருள் தீராமல், மறுபயன்பாட்டு விண்வெளி ஓடத்தை குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு செல்லும் வரை மெதுவாக எரிபொருளை பயன்படுத்தும் விசேஷமான எஞ்சின் இது என்று இஸ்ரோ குறிப்பிட்டிருக்கிறது.

70 கிமீ உயரம்...
எஞ்சினின் மேல் நுனியில் பொருத்தப்பட்டிருந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டை 70 கிமீ உயரத்திற்கு இந்த எஞ்சின் கொண்டு சென்றது. பின்னர், மறுபயன்பாட்டு ராக்கெட் தனியாக பிரிந்து அதில் பொருத்தப்பட்டிருந்த எஞ்சின் மூலமாக மீண்டும் பூமிக்கு திரும்பி வங்காள விரிகுடா கடலில் தரையிறங்கியது.

வேகம்
விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பியபோது 5 மேக் வேகம், அதாவது ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் பூமியை நோக்கி வந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விசேஷ பூச்சு
விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பும்போது காற்று உராய்வு காரணமாக ஏற்படும் வெப்பத்தை தாங்கும் விதத்தில் விசேஷ செராமிக் பூச்சு இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

செலவு குறையும்
தற்போது ஏவப்படும் ராக்கெட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், இந்த வகை ராக்கெட்டை பல முறை பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், விண்வெளியில் செயற்கைகோள்களை எடுத்துச் செல்வதற்கான செலவீனம் 10 மடங்கு குறையும்.

மாதிரி மாடல்
தற்போது ஏவப்பட்டிருக்கும் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட் மாதிரி மாடல்தான். அதாவது, இதைவிட 6 மடங்கு பெரிய மறுபயன்பாட்டு ராக்கெட்தான் முக்கிய இலக்கு. 2030ம் ஆண்டில் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

தொடர் சோதனை
இதுபோன்ற பல மாதிரி மறுபயன்பாட்டு ராக்கெட் மாதிரிகளை தொடர்ந்து சோதனை செய்து மேம்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலமாக, சிறப்பான மறுபயன்பாட்டு ராக்கெட்டை இந்தியா தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ சாதனை
அமெரிக்காவின் நாசா இதுபோன்ற மறுபயன்பாட்டு விண்வெளி ஓடங்கள் செலுத்துவதை நிறுத்திவிட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் புளூ ஆரிஜின் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுபோன்ற மறுபயன்பாட்டு ராக்கெட்டை சோதனை செய்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ராக்கெட் வர்த்தக ரீதியிலும் மிகுந்த முக்கியத்துவம் பெற இருக்கிறது.

மண்ணெண்ணெயில் பறக்கப்போகும் இஸ்ரோவின் புதிய ராக்கெட்... 'கிலி'யில் அமெரிக்க நிறுவனங்கள்!!


Click it and Unblock the Notifications








