சட்டத்தில் இல்லாத புதிய விதியை உருவாக்கி அபராதம் விதித்த போலீசார்.. வாகன ஓட்டிகளே உஷார்..
அரசால் அனுமதிக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் சட்டவிரோதமானது என தெரிவித்து அபராதம் விதித்துள்ளனர் போலீஸ்காரர்கள்.
அரசால் அனுமதிக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் சட்டவிரோதமானது என தெரிவித்து அபராதம் விதித்துள்ளனர் போலீஸ்காரர்கள். மன்த்லி டார்கெட்டை முடிப்பதற்காகவே இல்லாத விதியை உருவாக்கி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர் அந்த போலீஸ்காரர்கள். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க, சம்பவ இடத்திலேயே புது புது விதிகளை வகுப்பதில், நம்ம ஊரு போலீஸ்காரர்கள் கில்லாடி. நீங்கள் கொஞ்சம் அசந்தால், மோட்டார் வாகன சட்டத்தில் இல்லாத விதிகளை எல்லாம் தெரிவித்து, பணத்தை எப்படியும் கறந்து விடுவார்கள்.

அப்படிப்பட்ட போலீஸ்காரர்களிடம் பணத்தை பறிகொடுத்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். இருந்தாலும் இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை வெளிப்படையாக நிரூபணம் செய்யும் வகையிலான ஒரு சம்பவம், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 (TVS Apache RR310) பைக்கில் வந்த அதன் உரிமையாளருக்கு, போலீஸ்காரர்கள் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதிக்கப்பட்ட அந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் (LED headlamps) பொருத்தப்பட்டு இருந்ததாம்.

இத்தனைக்கும் அது ஃபேக்டரி ஃபிட்டட் (factory-fitted) எல்இடி ஹெட்லேம்ப்ஸ்தான். தனியாக பொருத்தப்பட்டதும் கிடையாது. இந்தியாவில் விற்பனையாகும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குடன் வரும் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் அனைத்தும் முழுக்க முழுக்க சட்டபூர்வமானது.

இருந்தாலும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி ஹெட்லேம்ப்ஸ் சட்ட விரோதமானது என்ற புதிய விதியை சம்பவ இடத்திலேயே உடனடியாக உருவாக்கி விட்டனர் அந்த ஜகஜால கில்லாடி போலீஸ்காரர்கள். அத்துடன் 100 ரூபாய் அபராதமும் விதித்து விட்டனர்.

அந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் வந்த நபரோ, ''இந்த எல்இடி ஹெட்லேம்ப்ஸ் ஃபேக்டரி பிட்டட்தான். அதற்கு ஆர்டிஓ ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது'' என தெரிவித்து, போலீஸ்காரர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அதற்கெல்லாம் போலீஸ்காரர்கள் வளைந்து கொடுக்கவில்லை.

நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்கிற ரீதியில் பதில் அளித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சோத்பூர் காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள்தான் அந்த ஜகஜால கில்லாடி போலீஸ்காரர்கள். வாகன தணிக்கையின்போது, இந்த விதிமீறலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் மற்றும் பைக்குகளில் தற்போது ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் பல்வேறு புதிய வசதிகள் குறித்து போலீஸ்காரர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டிய நேரமிது. அந்த வகையிலான ஒரு வசதிதான் எல்இடி ஹெட்லேம்ப்ஸ்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மட்டும்தான் ஃபேக்டரி ஃபிட்டட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் உடன் விற்பனைக்கு வரும் ஒரே மோட்டார் சைக்கிள் என நினைத்து விட வேண்டாம். கேடிஎம் டியூக் 390, பஜாஜ் டோமினார், யமஹா எப்இஸட் 25 உள்ளிட்ட பைக்குகளும், அப்படிதான் விற்பனைக்கு வருகின்றன.

இதுதவிர பல்வேறு கார்களிலும் ஸ்டாண்டர்டாக எல்இடி ஹெட்லேம்ப்ஸ் வழங்கப்படுகின்றன. ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி ஸ்விப்ட் முதல் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா வரை பல்வேறு புதிய கார் மாடல்களில், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் வழங்கப்படுகின்றன.

இதில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இந்த எல்இடி ஹெட்லேம்ப்ஸ் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, அரசின் சார்பில் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே நிச்சயமாக அவை சட்ட விரோதமானது என சொல்லவே முடியாது.

பின்னர் ஏன் அபராதம் விதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? வேறு ஒன்றும் இல்லை. மாதாந்திர இலக்குதான் (Monthly targets). மன்த்லி டார்கெட்டை முடிப்பதற்காக, ஒவ்வொரு மாத கடைசியிலும் போலீஸ்காரர்கள் இவ்வாறு வசூல் வேட்டை நடத்துவது அனைவரும் அறிந்த ஒன்றே.

அந்த சமயங்களில்தான் இது போன்ற புது புது விதிகளை உருவாக்கி வசூல் வேட்டையாடி விடுகின்றனர் போலீஸ்காரர்கள். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். அத்துடன் இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதும் அரசின் கடமை.
Source: Priyam Bose
{document1}


Click it and Unblock the Notifications