சுகோய் - பிரம்மோஸ் கூட்டணி... 3,200 கிமீ தூர இலக்குகளை கபளீகரம் செய்யும்!
சுகோய் விமானத்தில் வைத்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஏவுகணையின் தொழில்நுட்ப சிறப்புகளையும், கூடுதல் பாதுகாப்பு விஷயங்களையும் பார்க்கலாம்.
சுகோய் போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை நோக்கி செலுத்தப்பட்ட வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனை எதிரி நாடுகளை ஆடிப் போக வைத்துள்ளது. அதற்கான காரணங்களை பார்க்கலாம்.

உலகின் மிக அதிவேகமான சூப்பர்சானிக் ரக ஏவுகணை பிரம்மோஸ். இந்தியா- ரஷ்யா கூட்டணியில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை ஏற்கனவே தரைப்படை மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், தற்போது போர் விமானத்தில் பொருத்தி ஏவப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்திய விமானப்படையிலும் பிரம்மோஸ் ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.

சுகோய் எம்கே-1 போர் விமானத்தில் பொருத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, வங்கக் கடலில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இதன்மூலமாக, இந்த சோதனை வெற்றியடைந்துள்ளது.

இந்த சோதனை மூலமாக, இந்தியாவின் முப்படைகளும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போர் விமானத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்ட விவகாரம் எதிரி நாடுகளுக்கு பெரும் அச்சத்தை தந்துள்ளது.

சர்வதேச ஏவுகணை பாதுகாப்பு விதிகளின்படி, ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில் இந்த ஏவுகணையை அதிகபட்சமாக 300 கிமீ தூரம் வரை மட்டுமே செலுத்தும் திறனுடன் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஏற்கனவே தரைப்படை மற்றும் கடற்படை நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும், பிரம்மோஸ் மூலமாக இந்திய எல்லையை முழுவதுமாகவும், விரைவாகவும் பாதுகாக்க முடியாத நிலை இருந்தது.

ஆனால், தற்போது சுகோய் போர் விமானத்தின் மூலமாக வான் வழியாக எடுத்துச் சென்று இலக்கிற்கு அருகில் சென்று செலுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளது. ஆம். தற்போது 3,200 கிமீ தூரம் வரை சுகோய் போர் விமானம் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையின் பயணிக்கும்.

இதனால், எதிரி நாட்டு கப்பல்கள், விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் விரைவாக அதன் மீது பிரம்மோஸ் ஏவுகணையை தாக்கி அழிக்க முடியும். எல்லைப் பகுதிகளில் இருக்கும் எதிரிகள் மற்றும் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை அழிப்பதற்கான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலிலும் இந்த பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்த முடியும்.

இதனால், சுகோய் போர் விமானம் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை கூட்டணியை மிகவும் அபாயகரமானதாக எதிரி நாடுகள் பார்க்கின்றன. மேலும், இந்தியா மீது தாக்குதல் தொடுக்க எண்ணினால் ஒன்றுக்கு இரண்டு முறை பின் விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டி இருக்கும்.

சுகோய் போர் விமானத்தில் வைத்து செலுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை 2.5 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 5,914 கிமீ வேகம் வரை பாய்ந்து சென்று 290 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும்.

எதிரிகள் சுதாரிப்பதற்குள் இந்த பிரம்மோஸ் ஏவுகணை காரியத்தை முடித்துவிடும். அத்துடன், வெளிநாடுகள் இதன் வழிகாட்டு சாதனத்திற்குள் ஊடுருவ முடியாத வகையில் மிகுந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வெடி குண்டுகளையும், அணு குண்டுகளையும் இந்த ஏவுகணையில் பொருத்தி செலுத்த முடியும். அதிகபட்சமாக 300 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை இந்த ஏவுகணையில் வைத்து இலக்கை நோக்கி அனுப்பலாம்.

எல்லைப் பகுதிகளில் இருக்கும் பதுங்கு குழிகள் மற்றும் ராணுவ தளங்களையும் கண நேரத்தில் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்தது இந்த பிரம்மோஸ் ஏவுகணை. அண்டை நாடுகளால் அதிக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், அதனை சமாளிக்க விமானப்படைக்கு பிரம்மோஸ் ஏவுகணை வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








